பெங்களூர் யாருக்கு.. பார் ஓனர் கொலையின் பரபர பின்னணி.. டிவி சேனலுக்கு வந்த பகீர் கால்.. கேங் வார்?
பெங்களூர்: நட்டநடு பெங்களூரில்.. பார் ஓனர் ஒருவரை, அவரது பாருக்கு வெளியே வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பகீர் சம்பவத்தின் பின்னணியில் பெரும் தாதாக்களின் சதித்திட்டம் இருக்கிறது என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
கேஜிஎப் திரைப்படத்தில், கேஜிஎப்பை பிடிக்க எப்படி பல தாதாக்கள் காத்திருப்பார்களோ, அப்படி பெங்களூரை கட்டுப்படுத்தும் சதித் திட்டத்தின் முதல் விதைதான், பார் ஓனரின் பிணம் என்று கூறுகிறது போலீஸ்.
பெங்களூரில் மையப்பகுதியில் உள்ள பிரிகேட் ரோடு பகுதியில் உள்ள ஒரு பார் எதிரே, 10 நாட்களுக்கு முன்பாக, இரவு 9 மணியளவில், மணிஷ் ஷெட்டி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழகத்தைக் காப்பாற்ற ஆளும் அதிமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்
பார் ஓனர் சுட்டுக் கொலை
பாரின் உரிமையாளரான இவர் போன் பேச வெளியே வந்தபோது ஸ்கூட்டரில் வந்த இருவர் சுட்டதில் அதே இடத்தில் இறந்தார் மணிஷ் ஷெட்டி.
நிழல் உலக தாதா முத்தப்பா ராய் என்பவரின் முன்னாள் கூட்டாளிதான் மணிஷ் ஷெட்டி. முத்தப்பா ராய் கடந்த மே மாதம், புற்று நோய் காரணமாக மரணம் அடைந்த நிலையில், அவரது முன்னாள் கூட்டாளி மனிஷ் ஷெட்டி சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொலைக்காட்சிக்கு வந்த கால்
பெங்களூரில் ரவுடிக் கும்பல்கள், அரிவாள், கத்தி போன்றவற்றால் மோதிக் கொள்வது வழக்கம். துப்பாக்கி என்பது மிகவும் அரிதானது. மும்பை பாணியிலான ரவுடியிசம் இது. கர்நாடகாவின் மங்களூர், உடுப்பி போன்ற கடலோர மாவட்டங்களில் ரவுடிக் கும்பல்கள் துப்பாக்கியால் மோதிக் கொள்வது வழக்கம். பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டவர் பூர்வீகமாக மங்களூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அங்குள்ள பழைய பகை இதன் பின்னணியில் இருக்கலாம் என்று போலீஸ் முதலில் சந்தித்தது. ஆனால் இப்போது திடீர் திருப்பமாக மும்பை முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி, விஜய் ஷெட்டி பெங்களூரைச் சேர்ந்த டிவி 9, மங்களூரில் உள்ள இன்னொரு கன்னட சேனல் ஆகியவற்றுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மணிஷ் ஷெட்டி தனது ஆட்களால் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பெங்களூர் யாருடைய கட்டுப்பாடு
உடுப்பி மாவட்டத்தில், செப்டம்பர் மாதம் நடைபெற்ற ரவுடியின் கொலை பின்னணியில் மணிஷ் ஷெட்டி இருந்ததாகவும், எனவே தான், அவரை தனது ஆட்களை விட்டு போட்டு தள்ளியதாகவும் கூறியுள்ளார் விஜய் ஷெட்டி. காவல்துறை அந்த கோணத்திலும் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது. வழக்கமான காலகட்டத்தில் இந்த கொலை நடந்திருந்தால் மங்களூர் பக்கம் நடந்த கொலைக்கு, பெங்களூரில் பழிவாங்கி இருப்பதாக காவல்துறை கருதி இருக்கும். ஆனால் முத்தப்ப ராய் மரணம் அடைந்துள்ள நிலையில், பெங்களூரில் எந்த ரவுடி கோஷ்டி அதிகாரம் செலுத்துவது என்ற போட்டி உருவாகி உள்ளதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
ரவுடிகள் மோதல்
மற்றொரு பக்கம் நிழல் உலக தாதா ரவி பூஜாரி வெளிநாட்டில் இருந்தபடி, பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவில் பல நகரங்களில் தனது ஆட்கள் மூலமாக அதிகாரம் செலுத்தி வந்தார். அவர் தற்போது நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரவி பூஜாரி முத்தப்ப ராய் ஆகிய இருவரும் இல்லாத இந்த சூழ்நிலையில் பெங்களூரை யார் கட்டுப்பாட்டில் எடுப்பது என்று ரவுடிக் கும்பல்கள் தங்களுக்குள் மோத ஆரம்பித்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
காவல்துறை சந்தேகம்
ஏனெனில், தொலைக்காட்சிக்கு விஜய் தொடர்பு கொண்டு மணிஷ் ஷெட்டி கொல்லப்பட்டதில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறுவதை காவல்துறை நம்பவில்லை. மணிஷ் கொல்லப்படுவதற்கு 4 மாதங்கள் முன்பு இருந்த கொலையாளிகள் அவரது நடவடிக்கைகளை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலையில் நான்கு பேர் சம்மந்தப்பட்டு உள்ள நிலையில் இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஒருவர் அந்த மதுபான, பார் கடைக்கு அருகே வேலை பார்த்தவர். எனவே செப்டம்பர் மாத கொலைக்கு பழி வாங்குவதற்காக இந்த கொலை நடந்ததாக தொலைக்காட்சிக்கு போன் செய்து விஜய் கூறியதை, காவல்துறை நம்ப மறுக்கிறது. தன் இமேஜை உயர்த்த வேண்டும் என்பதற்காக இப்படி விஜய் பேசியிருக்கலாம். ஆனால் பின்னணியில் பெங்களூரை யார் கட்டுப்படுத்துவது என்ற ரவுடி கும்பல்களின் பேராசை இருக்கிறது. இதன் பின்னணியில் சிலர் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம், என்கிறது காவல்துறை தரப்பு.