மெட்ரோ பணியின்போது எரிவாயு குழாயில் ஓட்டை.. பயங்கர சத்தத்தோடு வெளியான காஸ்.. பெங்களூரில் பீதி
பெங்களூர்: மெட்ரோ ரயில் பணிகளின்போது, காஸ் பைப்பில் ஓட்டை போட்டதால், பெங்களூர் மெட்ரோ ரயில் கழகத்திற்கு எதிராக போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் நகரில் முதல்கட்ட மெட்ரோ மார்க்கங்களில் பயணிகள் சேவை சில ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், அதன் விரிவாக்க பணிகள் புற நகர் பகுதிகள் வரை நீளத் தொடங்கியுள்ளது.
இப்படித்தான் பெங்களூரின், ஒயிட்பீல்டு பகுதியிலுள்ள ஐடிபிஎல் மெயின் ரோடு, கருடாச்சார்பாளையா பகுதியிலும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ பணிகளால், இந்திய எரிவாயு ஆணையத்திற்கு சொந்தமான (GAIL) எரிவாயு குழாயில் இன்று காலை, லீக் ஏற்பட்டது.
வாயு வெளியேறியது பெரும் சத்தத்தோடு கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை, தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து காவல்துறை மேற்கொண்டது.
one gas pipeline damaged near Garudacharpalya,Hoodi while digging by BMRCL and the gas coming out...traffic jam in ITPL road....Fire force have came and repair work is going on...We have blocked the vehicles which r moving towards ITPL for the safety of public.
— K R PURAM TRAFFIC BTP (@krpuramtrfps) October 29, 2018
எரிவாயு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வருகை தந்தனர். அவர்கள் உடைபட்ட குழாயை சீர் செய்தனர். போக்குவரத்து தடை செய்யப்பட்டது தெரியாமல் அப்பகுதிக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்வோர் வாகனங்களில் வந்ததால், ஹூடி-சீதாராம்பாளையா சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இதனிடையே, மெட்ரோ ரயில் நிர்வாகம் மீது, எரிவாயு ஆணையம் சார்பில், மகாதேவபுரா காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட புகாரையடுத்து எப்.ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.