கர்நாடகாவில் தாண்டவமாடும் கொரோனா.. இனி கடவுள்தான் காப்பாற்றனும்.. கை விரித்த சுகாதாரத்துறை அமைச்சர்
பெங்களூர்: கர்நாடகா முழுக்க, அதிலும் குறிப்பாக பெங்களூர் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மிகமிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், "இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று, தனது கையை விரித்து உள்ளார் அம்மாநில அமைச்சர். அதுவும், சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு.
கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 176 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளன. இதில் சுமார் 2000 பேர், அதாவது 1,975 பேர் பெங்களூர் நகரைச் சேர்ந்தவர்கள். பெங்களூர் நகரில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 437 என்ற அளவில் உள்ளது.
ஒரு கட்டத்தில் மிகவும் அருமையாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வரக்கூடிய மாநிலம் என்று பெயர் பெற்றது கர்நாடகா. அதிலும் பெரு நகரங்களில் பெங்களூர் மிகச் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டுக்களைப் பெற்றது.
கொரோனா தடுப்பூசி.. இந்த ஆண்டு இறுதிக்குள் வந்துவிடும்.. அமெரிக்க நிபுணர் தகவல்
அமைச்சர்களிடையே உரசல்
பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட பிறகு இதில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டது. ஆனால் இப்படி எல்லாம் நிலைமை மாறும் என்பது தெரியாமல் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் மற்றும் பெங்களூரை சேர்ந்தவரும், வருவாய் துறை அமைச்சருமான அசோகா ஆகிய 3 அமைச்சர்கள் இடையே அதிகார போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
நடைமுறைக்கு வராத அறிவிப்புகள்
ஒவ்வொருவரும் மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டு மீடியாக்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற வேண்டும் என்று நினைத்தார்களே தவிர நடைமுறையில் அதை செயல் படுத்தவில்லை. உதாரணத்துக்கு மார்ச் மாதத்தில் கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, தனிமைப்படுத்தப் படுவதற்காக, ஒரு லட்சம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை 30,000 படுக்கை வசதி மட்டும்தான் செயல்பாட்டில் உள்ளது. இது தவிர ஆம்புலன்ஸ்கள் கூட இல்லாமல் பல கொரோனா நோயாளிகள் அவசர தேவைக்கு மருத்துவமனைகள் செல்ல முடியாமல் பலியாகும் சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
ஊரடங்கு தளர்வு
எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யாமல், ஊரடங்கு தளர்வு அறிவித்ததன், விளைவாக பெரும் சேதத்தை சந்தித்தது கர்நாடகா. இதையடுத்துதான் பெங்களூரு நகரில் வரும் 22ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற்குள் சுமார் 200 ஆம்புலன்ஸ்களைத் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த காலகட்டத்தில் இதெல்லாம் நடக்கக் கூடியதா என்றால் சந்தேகம் தான்.
சர்ச்சை அமைச்சர் ஸ்ரீராமுலு
இப்படி நிலைமை கைமீறிப் போய் விட்ட நிலையில்தான், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு கூறுகையில், அரசு இதற்கு மேல் என்ன செய்யமுடியும்? கடவுள் தான் நம்மை இப்போது காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதிலும், பெரும் கூட்டங்களில் பங்கேற்பது, கூட்டம் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வந்தவர்தான் இவர். தற்போது வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
ராஜினாமா செய்யட்டும்
இதுபற்றி காங்கிரஸ் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கிருஷ்ண பைரே கவுடா கூறுகையில், ஸ்ரீராமுலு கருத்தை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு மேல் இந்த அரசு எதற்காக இருக்க வேண்டும்? பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு செல்லட்டும். நிலைமை கைமீறிப் போய்விட்டது. மருத்துவமனைகளில் படுக்கை வசதியில்லாமல், மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல், முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். நோயாளிகள் கூட அவர்களுக்கு தேவையான சிகிச்சை வசதியை பெற முடியாமல் தவிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
டி.கே.சிவகுமார் விமர்சனம்
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், அமைச்சர்கள் இடையே நடைபெற்ற அதிகார மோதல்தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். கொரோனா நோய்தடுப்பு பணிகளுக்காக, பெங்களூருக்கு மட்டும், 7 அமைச்சர்கள், ஒரு எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பணிகளில் நாங்கள் யாராவது குறுக்கிட்டோமா? அப்படி இருந்தும் பெங்களூர் நிலைமை இப்படி போனதற்கு வேறு யார் பொறுப்பேற்க முடியும், என்று கேள்வி எழுப்பினார். கொரானா நோய்த் தடுப்பை கட்டுப்படுத்த வேண்டிய, கர்நாடக சுகாதார அமைச்சரே, இவ்வாறு பேசியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.