கடைசி பஸ் வருவதற்கு முன்பே கிளம்பிய விமானம்.. பயணிகள் கடும் அவதி.. ரூ.10 லட்சம் ஃபைன் போட்ட டிஜிசிஏ!
விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோதே, விமானம் கிளம்பிச் சென்றதால் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் பயணிகளை ஏற்றாமல் கிளம்பிச் சென்றதற்காக 'கோ ஃபர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் சமீபகாலமாவே விமானம் தொடர்பாக சில சர்ச்சை நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி சிறுநீர் கழித்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலக அரங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு விமானத்தில் நடுவானில் பயணிகள் இருதரப்பாக பிரிந்து சண்டை போட்டுக் கொண்டது; விமானப் பெண் ஊழியரிடம் பயணி ஒருவர் தவறாக நடக்க முயன்றது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
விமானம் கடத்தப்பட்டது..பயணி போட்ட டிவிட்டால் பரபரத்த டெல்லி விமான நிலையம்..கடைசியில் நடந்த ட்விஸ்ட்
பஸ்ஸில் சென்ற பயணிகள்
அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு பயணிகளை விட்டுவிட்டு விமானம் பறந்த சம்பவம் கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டது. பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 9-ஆம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு கோ ஃபர்ஸ்ட் (Go First) விமானம் டெல்லிக்கு செல்வதாக இருந்தது. இந்த விமானத்தில் ஏறுவதற்காக வழக்கம் போல பயணிகளுக்கு சோதனை நடைபெற்றது. பின்னர் பயணிகளை 4 குழுக்களாக பிரித்து பேருந்துகள் மூலமாக விமானத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
டாட்டா காட்டிய விமானி
அதன்படி, பயணிகள் தனித்தனி பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பாகவே அவர்களின் உடைமைகள் (லக்கேஜ்) விமானத்தில் ஏற்றப்பட்டன. இந்நிலையில், முதல் 3 பஸ்களில் சென்ற பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். 4-வது பேருந்து 55 பயணிகளுடன் விமானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராவிதமாக விமானம் புறப்பட்டு பறந்து சென்றது. இதையடுத்து, ஏற்றிச் செல்லாமல் விடப்பட்ட பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பயணிகளின் கோபத்தை உணர்ந்த அதிகாரிகள், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் பயணிகள் சமாதானம் அடையவில்லை. மேலும் அவர்கள், இந்த விஷயம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் ட்விட்டரில் புகார் தெரிவித்தனர். பின்னர் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசினர். இதனைத் தொடர்ந்து, அந்த பயணிகள் வேறு விமானத்தில் காலை 10 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திடம் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ரூ.10 லட்சம் அபராதம்
இதையடுத்து, 'கோ ஃபர்ஸ்ட்' விமான நிறுவனம் டிஜிசிஏவிடம் தனது விளக்க அறிக்கையை அளித்தது. அதில், "குறிப்பிட்ட சம்பவம் கவனக்குறைவால் நடந்துவிட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அடுத்த ஆண்டுக்குள்ளாக இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல இலவச டிக்கெட் வழங்குகிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பரிசீலித்த டிஜிசிஏ, அந்நிறுனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவில், "கோ ஃபர்ஸ்ட் நிறுவன அதிகாரிகள், விமானக் குழு உறுப்பினர்கள், விமானி இடையே முறையான தகவல் தொடர்பு இல்லாததே இந்த பிரச்சனைக்கு காரணம் தெரியவந்துள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.