கூகுள் ஆபீசிலும் கால் வைத்த கொரோனா வைரஸ்.. பரபரப்பில் பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அந்த நகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
பெங்களூரில் பாதிக்கப்பட்டதில் பெரும்பாலானோர் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்தான். டெல் நிறுவனம், மைன்ட்ட்ரீ மைண்ட்ஸ் போன்றவற்றின் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில், கூகுளுக்கும் கொரோனா பரவியுள்ளது.
இதுபற்றி கூகுள் நிறுவன செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது பெங்களூர் அலுவலகத்தில் ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி தெரிந்ததுமே, அந்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டார். அந்த ஊழியரோடு நெருங்கி பழகிய ஊழியர்கள் தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், ஆரோக்கிய நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை முதல் பெங்களூர் அலுவலக கூகுள் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். நாங்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அனைவரது ஆரோக்கியமும், சுகாதாரமும் எங்களால் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exclusive: பரவும் கொரோனா.. அச்சத்தில் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்களின் நடவடிக்கை என்ன? பரபர பெங்களூர்
பெங்களூரில் ஏற்கனவே 4 பேர் கொரோனா வைரஸ் தாக்கி ராஜிவ் காந்தி நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கூகுள் ஊழியரோடு சேர்த்தால் இந்த எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. அங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு (ப்ரீகேஜி உட்பட) மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் தவிர்த்த கர்நாடகாவின் பிற பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் கிடையாது.