இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றனும்.. சபாநாயகருக்கு கர்நாடக ஆளுநர் திடீர் கடிதம்.. பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக சட்டசபை சபாநாயகருக்கு, ஆளுநர் வஜுபாய் வாலா இன்று திடீரென ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று அதில் சபாநாயகரை ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் குமாரசாமி கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். அவர் உரையாற்றியதும், மேலும் சில உறுப்பினர்கள் பேசிவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அரசுக்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில், சட்டசபை அலுவல் நீடித்துக்கொண்டே செல்ல காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில்தான் இன்று மதியம் உணவு இடைவேளையின் போது திடீரென ஆளுநர் வஜுபாய் வாலாவை, பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்டோர் சென்று சந்தித்து, சபாநாயகர் துணையுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைக்க முயற்சிகள் நடைபெறுவதாக புகார் அளித்தனர்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக தலையிட வேண்டும் என்பது பாஜக கோரிக்கை. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக கவனித்து அறிக்கை தருவதற்காக ஆளுநரின் சிறப்பு அதிகாரி சட்ட சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் அதிகாரிகளுக்கான மாடத்தில் அமர்ந்தபடி நிகழ்வுகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கு நடுவே, சபாநாயகருக்கு, ஆளுநர் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அதை, சட்டசபையில் வாசித்துக் காண்பித்தார், சபாநாயகர் ரமேஷ் குமார். ஆளுநர் கடிதத்தில் கூறியுள்ளதாவது: சட்டசபையில் முதல்வர் இன்று, நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளதை அறிந்துள்ளேன். சட்டசபையின் கவுரவத்தையும், ஜனநாயகத்தையம் காப்பாற்றும் பொருட்டு, இன்றே, நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் இருப்பதாக, ரமேஷ் குமார் தெரிவித்தார்.
இதைக் கேட்ட அமைச்சர்கள், தேஷ்பாண்டே, கிருஷ்ணாபைரே கவுடா போன்றோர், ஆளுநருக்கு இப்படி ஒரு கடிதம் அனுப்ப அதிகாரம் இல்லை என ஆட்சேபனை தெரிவித்தனர். கடிதம் எழுதலாமே தவிர, சட்டசபை அலுவல் எப்படி நடக்க வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்த முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கர்நாடக அரசியல் நிலைமை ஆளுநர் vs சபாநாயகர் என்று மாறியுள்ளது.