கவிழ்ந்தது குமாரசாமி அரசு ...அப்பாவும் மகனும் ராசியில்லா ராஜாக்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியை பறிகொடுத்திருக்கிறார் முதல்வர் குமாரசாமி. 2-வது முறையாகவும் குமாரசாமி முழுமையாக முதல்வர் பதவி வகிக்கவில்லை. அவரது தந்தை தேவகவுடாவும் முதல்வராக., பிரதமராக முழுமையான பதவி காலத்தை அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 15 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்புடன் முடிவுக்கு வந்தது. ஜேடிஎஸ்-காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரும் நிலைக்கு தள்ளப்பட்டார் குமாரசாமி. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி முதல்வராக பதவி ஏற்றிருந்தார் குமாரசாமி. ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்தார். பாஜகவுடனான உடன்படிக்கையின் படி பதவியை விட்டுக் கொடுத்தார். ஆனால் திடீரென பாஜகவுக்கு ஆதரவு தர மறுக்க அப்போது ஜனாதிபதி ஆட்சி அமலானது. பின்னர் சில மாதங்கள் கழித்து பாஜகவின் எடியூரப்பா முதல்வராக ஆதரவு தந்தார் குமாரசாமி.
தற்போதும் சுமார் 13 மாதங்கள் மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமர்ந்து இன்று பதவியை பறிகொடுத்திருக்கிறார் குமாரசாமி.
அவரது தந்தை தேவகவுடா 1994-ல் கர்நாடகா முதல்வராக பதவி வகித்தார். 1996-ல் காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி அரசு மத்தியில் அமைந்தது. அப்போது பிரதமர் பதவி தேவகவுடாவுக்கு கிடைத்தது. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரதமரானார். அவருக்கு பதில் ஜே.எச். பாட்டீல் முதல்வரானார்.
ஆனால் தேவகவுடா 11 மாதங்கள்தான் அந்த பதவியில் இருந்தார். ஐக்கிய முன்னணி அரசுக்கான காங்கிரஸின் ஆதரவு வாபஸ் என்கிற மிரட்டலால் தேவகவுடா பதவி விலகி குஜ்ரால் பிரதமரானார்.
அப்பாவுக்கும் மகனுக்கும் 'நாற்காலி' ராசிகள் ஒத்துவரலை!