முதல் முறையாக, பெங்களூரில் களமிறங்கும் தேவகவுடா.. காங்கிரஸ், ம.ஜ.த குஷி.. பாஜக அதிர்ச்சி
Recommended Video
பெங்களூர்: மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா, இம்முறை முதல் முறையாக, 'பெங்களூர் வடக்கு' லோக்சபா தொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். இதனால் பெங்களூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 18ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பெங்களூர் உட்பட தென் கர்நாடகாவிலுள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டத்திலும், வட கர்நாடகாவில் அமைந்துள்ள மற்ற 14 தொகுதிகளுக்கும், 23ம் தேதியும் தேர்தல் நடைபெறும்.
இந்த தேர்தலிலும், கர்நாடகாவில் ஆளும், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி தொடருகிறது.
இனி இப்படித்தான்.. வாஜ்பாய் - அத்வானியாக உருமாறும் மோடி - அமித் ஷா
காங்கிரஸ்-மஜத கூட்டணி
காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ம.ஜ.த 8 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. இதில் முக்கியமாக கவனிக்கப்படுவது ம.ஜ.த தேசிய தலைவர் தேவகவுடாவின் மூவ்தான். ஒக்கலிகர் ஜாதியினரின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஹாசன் தொகுதியில், தேவகவுடா எம்.பியாக உள்ளார். அவர் அங்கு இதற்கு முந்தைய தேர்தல்களிலும் எளிதாக வெற்றி பெற்றவர். கேக்கில் கத்தியை வைப்பது போன்று மிக இயல்பாகவும், எளிதாகவும், தேவகவுடாவின் வெற்றி அங்கு சாத்தியப்பட்டது. காரணம்.. ஒக்கலிக ஜாதியினரின் பாதுகாவலர் என்று இவருக்கு கிடைத்துள்ள இமேஜ்.
இரு பேரன்கள்
இந்த முறை, தனது பேரனும், கர்நாடக பொதுப் பணித்துறை அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ஹாசனில் களமிறக்கப்பட்டுள்ளார். பேரனின் அரசியல் என்ட்ரி எளிதானதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹாசனை தியாகம் செய்துள்ளார் தாத்தா தேவகவுடா. இதேபோல ஒக்கலிகர் பெரும்பான்மையாக உள்ள மண்டியா தொகுதியில், தனது மற்றொரு பேரனான, கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன், நிகில் களமிறக்கப்பட்டுள்ளார். எனவே, தேவகவுடாவின் பார்வை பெங்களூர் பக்கம் திரும்பியுள்ளது. தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கப்போவதாக இதுவரை கூறி வந்த தேவகவுடா, தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு, போட்டியிட முடிவு செய்துவிட்டார்.
பெங்களூர் வடக்கு
ம.ஜ.த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மைசூர்-குடகு, தும்கூர், கோலார், சிக்கபள்ளாப்பூர் அல்லது பெங்களூர் வடக்கு, ஆகிய, ஐந்தில் ஒரு தொகுதியை தேவகவுடா தேர்ந்தெடுக்கலாம் என விருப்பம் தெரிவிக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்பிக்கள்தான், சிக்பள்ளாப்பூர், கோலார், தும்கூர் ஆகியவற்றில் இருப்பதால், காங்கிரஸ் இதற்கு சம்மதிக்கவில்லை. எனவே பாஜகவின் சதானந்தகவுடா எம்.பி.யாக உள்ள பெங்களூர் வடக்கு தொகுதிதான் தனக்கு ஏற்ற களம் என நினைக்கிறார் தேவகவுடா.
தொகுதி நிலவரம்
ஹெப்பால், பேட்டராயனபுரா, யஷ்வந்த்புரா, தாசரஹள்ளி, புலிகேசிநகர், கே.ஆர்.புரம், மகாலட்சுமி லேஅவுட், மல்லேஸ்வரம் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது, பெங்களூர் வடக்கு லோக்சபா தொகுதி. இங்கு கணிசமாக ஒக்கலிக ஜாதி வாக்கு வங்கி உள்ளது. கடந்த முறை சதானந்தகவுடா வெற்றிக்கும் இது உதவியது. மேலும், இஸ்லாமியர்கள் வாக்குகளும் கணிசமாக உள்ளது. அது காங்கிரஸ், ம.ஜ.த கட்சிகளுக்கு பிரிந்து கிடைத்து வந்தது. இம்முறை, ஒக்கலிகர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை தேவகவுடா மொத்தமாக ஈர்த்துவிடுவார் என நம்பப்படுகிறது. எனவே பாஜக பக்கம் கிலி ஏற்பட்டுள்ளது.
பயம் இல்லை
தேவகவுடா பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சதானந்தகவுடா வேறு தொகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். நான் தேவகவுடா மீது மரியாதை வைத்துள்ளேன். ஆனால் பயம் கிடையாது. தேவகவுடா இத்தொகுதியில் போட்டியிட்டால் எனக்கான சவால் அதிகரிக்கும். ஆனால் நான் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் சதானந்தகவுடா.
காங்கிரசுக்கும் கவுடா தேவை
கடந்த லோக்சபா தேர்தலில் பெங்களூர் வடக்கு, மத்தி, தெற்கு ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளையும் பாஜக வென்றது. பெங்களூரில், காங்கிரஸ் தனது பிடியை இழந்தபடியே உள்ளது. எனவே, தங்கள் கட்சி கூட்டணியுடன் தேவகவுடா பெங்களூர் வடக்கு தொகுதியில் களமிறங்குவது, தங்களுக்கும் மீண்டும் செல்வாக்கை பெற்றுத் தரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள். ம.ஜ.த மற்றும் பாஜகவை சேர்ந்த இரு முக்கிய ஒக்கலிக தலைவர்கள் நேருக்கு நேர் மோத உள்ளதால், பெங்களூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது.