எடியூரப்பாவுக்கு இடியாப்ப சிக்கல்.. குதிரை பேரம் தொடர்பாக மேலும் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்ட குமாரசாமி
Recommended Video
பெங்களூர்: கர்நாடகத்தில் ஆளும் மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா குதிரை பேரம் செய்து வருவதாக மேலும் சில ஆடியோ ஆதாரங்களை முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க அதில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முதல்வர் குமாரசாமி முன்வைத்தார்.
இதுதொடர்பாக அவர் கடந்த 8-ஆம் தேதி ஒரு ஆடியோ உரையாடலையும் வெளியிட்டார். அதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏ நாகனகவுடாவை பாஜகவில் இணைக்க அவரது மகன் சரணகவுடாவிடம் பணம் மற்றும் அமைச்சர் பதவியை ஆசை காட்டி எடியூரப்பா பேரம் பேசியதாக இருந்தது.
சரணகவுடாவுக்கு வலை
இந்த நிலையில் அதில் இருப்பது தனது குரல் அல்ல என்றும் தான் யாரையும் சந்திக்கவில்லை என்றும் எடியூரப்பா கூறி வந்த நிலையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சரணகவுடாவுக்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர் பாஜகவுக்கு உங்களது தந்தை மாறாவிட்டால் இத்துடன் அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போட வேண்டியிருக்கும் என மிரட்டியுள்ளனர்.
வழக்கு பதிவு
இதையடுத்து தேவதுர்கா காவல் நிலையத்தில் சரணகவுடா புகார் அளித்தார். அதன் பேரில் எடியூரப்பா, தேவதுர்கா பாஜக எம்எல்ஏ சிவனகவுடா நாயக் மற்றும் ஹசன் தொகுதி பாஜக எம்எல்ஏ பிரீத்தம் கவுடா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிருப்தி எம்எல்ஏ
இது இவ்வாறிருக்க மேலும் சில ஆடியோ பதிவுகளை முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ளார். அதில் அதில் சரணகவுடாவிடம் தொலைபேசியில் பேசும் பாஜக எம்எல்ஏ சிவனகவுடா நாயக் கூறுகையில் உங்களது தந்தை நாகனகவுடா மும்பையில் உள்ள ஆளும் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களின் கூடாரத்துக்கு செல்ல வேண்டும்.
யார் குரல்
அங்கு சென்று பாஜகவில் இணைந்தால் ரூ. 20 கோடியுடன் ரூ. 2.5 கோடி சேர்த்து ரூ. 22.5 கோடி பணம் தருவதாக கூறியுள்ளது போல் உள்ளது. சுமார் 80 நிமிடங்கள் ஓடும் ஒரு ஆடியோ பதிவில் பேசும் நபரது குரல் பிரீத்தம் கவுடாவை போல் உள்ளது.
விக்கெட்
அவர் அந்த பதிவில் கூறுகையில் ஜேடிஎஸ் தலைவர் தேவகௌடாவின் விக்கெட் சீக்கிரம் விழுந்துவிடும். குமாரசாமிக்கோ உடல்நிலை சரியில்லை. இதனால் ஜேடிஎஸ் கட்சி முடிவுக்கு வந்துவிடும் என அவர் பேசுவது போல் உள்ளது.
ஆடியோ
இந்த ஆடியோவில் சபாநாயகர் ரமேஷ் குமார் குறித்தும் எடியூரப்பா கூறியுள்ளார். அதாவது அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ரமேஷ்குமார் ஏற்றுக் கொள்வார் என அந்த ஆடியோவில் குறிப்பிட்டது போல் உள்ளது.
வீடு தேடி வரும்
அது போல் நாயக்கிடம், பாஜக உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை கொடுக்கும். எடியூரப்பா வாக்குக் கொடுத்துள்ளார். இது அவரது பொறுப்பாகும். உங்களுக்கு தேவையான பணத்தை எடியூராப்பாவின் மகன் விஜயேந்திரா அளிப்பார். பணம் போதவில்லை என்றால் விஜயேந்திராவிடம் பேசி முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடு தேடி வரும் என்றும் அந்த ஆடியோவில் உள்ளது.