14 மாதங்களாக காங்கிரஸுக்கு அடிமை போல் வேலை பார்த்தேன்.. குமாரசாமி வேதனை
பெங்களூர்: காங்கிரஸ் கட்சிக்கு அடிமை போல் நான் பணியாற்றினேன் என்றும் ஆயினும் தனது பணியை அக்கட்சி பாராட்டவில்லை என்றும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச் டி குமாரசாமி தெரிவித்திருந்தார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு காங்கிரஸ்- மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. 14 மாதங்களை கடந்த நிலையில் காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவிக்காக ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இதையடுத்து அந்த மாநிலத்துக்கு முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்று, நம்பிக்கை வாக்கெடுப்பை நிரூபித்த நிலையில் அவர் அப்பதவியில் தொடர்ந்து வருகிறார்.
மோகம்
இந்த நிலையில் எச் டி குமாரசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இன்றைய அரசியலானது மக்களுக்கு நல்லதை தரவில்லை. இன்றைய அரசியல், ஜாதி, வெறுப்பு அரசியல் மீதான மோகத்தால் நிறைந்துள்ளது.
பாராட்டவில்லை
ஜாதி அரசியலால் இன்று இளைஞர்கள் அவர்களது பாதையில் இருந்து விலகி செல்கின்றனர். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார். முதல்வர் பதவியிலிருந்து விலகியவுடன் மிகவும் சந்தோஷமானவராக உணர்கிறேன். ஆனால் நான் செய்த பணியை யாரும் பாராட்டவில்லை என்பதால் மனம் வருத்தமாக இருக்கிறது.
தெரியவில்லை
நான் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முழு சுதந்திரம் கொடுத்திருந்தேன். எம்எல்ஏக்கள் மட்டுமல்ல, மாநகராட்சித் தலைவருக்குக் கூட முழு சுதந்திரம் உண்டு. கடந்த 14 மாதங்களாக காங்கிரஸ் கட்சிக்கும் இந்த எம்எல்ஏக்களுக்கும் நான் அடிமை போல் பணியாற்றினேன். ஆனால் என் மீது ஏன் அவர்கள் குறை கூறுகின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை என்றார்.