மழை நிவாரணம்: பிரதமரிடம் பேச பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு தைரியமே இல்லை.. குமாரசாமி அட்டாக்
பெங்களூர்: கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை பெறுவதற்காக பிரதமரிடம் பேச பாஜக எம்பி, எம்எல்ஏக்களும் தைரியமே இல்லை என கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசினார்.
மைசூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கர்நாடகத்தின் வட பகுதியில் சமீபத்தில் தென்மேற்கு பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு 2 மாதங்களாகியும் மக்களுக்கு இன்னும் நிவாரண நிதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மத்திய- மாநில அரசுகள் எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை.
வெளளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசை விட மாநில அரசு மிகவும் அலட்சியமாக உள்ளது. கர்நாடக அரசு மனது வைத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி இருக்கலாம்.
ஆனால் மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் மத்திய அரசின் நிதி உதவிக்காக காத்து கொண்டிருக்கிறது. நான் முதல்வராக இருந்த போது வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது நானும் அவரை நேரில் சந்தித்து பேசினேன். எதிர்க்கட்சியை சேர்ந்த என்னையே பிரதமர் நேரில் சந்தித்துள்ளார். இப்போது கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அப்படியிருக்கும் போது பிரதமரை அந்த கட்சியின் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் சந்தித்து நிவாரண நிதியை பெற்று தரலாம்.
அவ்வாறு பேசினால் நிச்சயம் நிவாரண நிதியை பெற முடியும். ஆனால் அவர்களுக்கோ தைரியம் இல்லை என்றார் குமாரசாமி.