எல்லாத்துக்கும் காரணம் இந்த மீடியாக்கள்தான்.. இனி.. பகீர் முடிவை எடுத்த எச் டி குமாரசாமி
பெங்களூர்: இனி மேல் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க போவதில்லை என்று திடீர் முடிவை கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி எடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் கரும்பு விவசாயிகள் சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரியும் நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் இந்த போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனிடையே விவசாய சங்கத் தலைவர் ஜெயஸ்ரீ குரன்னவர் பற்றி முதல்வர் குமாரசாமி பேசியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குமாரசாமி கூறுகையில் தன் பேச்சை ஊடகங்கள் திரித்து விடுகின்றனர். எனது எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமான ஊடகங்களுக்கு இனி பேட்டி கொடுக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறுகையில் ஊடகங்களின் செயல்பாட்டால் நான் வருத்தத்தில் உள்ளேன். என்னை பற்றி அநியாயமான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. குறிப்பிட்ட ஊடகங்கள் எனக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன.
சிறிய விஷயத்தைக் கூட பூதாகரமாக்கி விடுகிறார்கள். எனவே இனி மேல் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கவே போவதில்லை. உங்களுக்கு வேண்டுமென்றால் செய்தியை வெளியிடலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். அது பற்றி எனக்கு கவலை கிடையாது என்று கூறியுள்ளார்.