யப்பா..சாமீகளா.. மன்னிச்சிடுங்கப்பா..திரும்பி வாங்க.. அதிருப்தியாளர்களுக்கு ரேவண்ணா கதறல் வேண்டுகோள்
Recommended Video
பெங்களூரு: தாம் யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்புகேட்பதாகவும் அனைவரும் திரும்பி வர வேண்டும் என்றும் ஜேடிஎஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் (ஜேடிஎஸ்) ரேவண்ணாவின் தலையீடுகளால்தான் எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை ஹோட்டலில் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் தங்களது அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்துவதில் படுதீவிரமாக இருந்து வருகின்றனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ரேவண்ணா, எந்த ஒரு எம்.எல்.ஏ.வையாவது நான் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். தயவு செய்து திரும்பி வந்துவிடுங்கள்.. உங்களிடம் நேரில் மன்னிப்பு கேட்கிறேன்.
இனி நான் ஹாசன் மாவட்டத்துடனும் என்னுடைய துறையை மட்டும் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் விவகாரங்கள் எதிலும் தலையிடப் போவதில்லை.
இந்த கூட்டணி அரசு என்பது கடவுள் கொடுத்தது. கடவுளின் ஆசியால் கூட்டணி அரசு தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு ரேவண்ணா கூறியுள்ளார்.