கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்.. மஜத தலைவர் விஸ்வநாத் ராஜினாமா.. காங். மீது பரபர குற்றச்சாட்டு
பெங்களூர்: மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின், கர்நாடக மாநில தலைவர் ஹெச்.விஸ்வநாத் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகாவில் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் காங்கிரஸ் நடுவே கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
லோக்சபா தேர்தலின்போதும், இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் இறங்கின. ஆனால் இந்த கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. மொத்தமுள்ள 28 தொகுதிகளில், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பாஜக 25 தொகுதிகளில், அமோக வெற்றி பெற்றது. பாஜக ஆதரித்த சுயேச்சை வேட்பாளர் சுமலதா, குமாரசாமி மகன் நிகில் கவுடாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன? தடுக்கும் முறை எப்படி?
இதைத் தொடர்ந்து, இரு கூட்டணி இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், இந்த கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை என்று வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில்தான் கர்நாடக மாநில தலைவர் விஸ்வநாத், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கூறுகையில், எனது குரல் கட்சிக்குள் எடுபடவில்லை. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நடுவே பல்வேறு பிளவுகள் உள்ளன.
கூட்டணி பிரச்சினைகளை சரி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு வெறும் பெயருக்குத்தான் செயல்பட்டு வருகிறதே தவிர, அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக சித்தராமையா பதவி வகித்து வருகிறார். அவரின் கைப்பாவையாக தான் குழு, உள்ளது.
மஜத தலைவரான என்னையோ, காங்கிரஸ் தலைவரான தினேஷ் குண்டுராவையோ, ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினராக சேர்க்கவில்லை. தேவகவுடா, நிகில் கவுடா தோல்வியின் பின்னணியில் காங்கிரசின் சதி உள்ளது. முதல்வர் குமாரசாமியை சுதந்திரமாக பணியாற்றவிடுவதும் இல்லை.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே நான் ராஜினாமா செய்ய முடிவு செய்து இருந்தேன். ஆனால் தேவகவுடாதான், சில நாட்கள் பொறுத்து இருக்குமாறு கேட்டுக் கொண்டார். எனவே தற்போது எனது ராஜினாமாவை அறிவிக்கிறேன். இனிதான், தேவகவுடாவை சந்திக்க உள்ளேன். இவ்வாறு விஸ்வநாத், தெரிவித்தார்.