சூறாவளி காற்று.. ஆலங்கட்டி மழை.. கோடை வெயில் போயே போச்சு.. குதூகலிக்கும் பெங்களூர்
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில், இன்று பிற்பகல் முதல், சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் நகரின் வெப்பநிலை குறைந்து குளு குளு காலநிலை நிலவுகிறது.
வழக்கத்தை விட கடுமையான வெப்பத்தை இந்த கோடை காலத்தில் சந்தித்தது பெங்களூரு. கோடையில் வெயில் அதிகமாக இருக்குமே தவிர, வியர்வை சட்டையில் வழிந்து ஓடும் அளவிற்கு இருக்காது. ஆனால் இந்த கோடைக்காலத்தில் அந்த அவஸ்தையையும் நகரவாசிகள் உணர்ந்தனர்.
ஆனால் கடந்த வாரம், செவ்வாய்க்கிழமை முதல், பெங்களூரின் தட்பவெப்ப நிலை மாறிப் போய் விட்டது என்றே சொல்லலாம்.
இன்று செம கனமழை இருக்கு.. எங்கெல்லாம் பெய்யும்.. சென்னை வானிலை மையம் கணிப்பு!
|
ஒரு வாரமாகவே மழைதான்
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாலை கடுமையான காற்றுடன் நல்ல மழை பெய்தது. இது நகரின் வெப்பத்தை கொஞ்சம் குறைத்தது. இதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் அப்போது மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக, பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் பெங்களூர் நகரில் ஆங்காங்கே மிதமானது முதல் ஓரளவு கனமானது வரை பெய்து வந்தது.
|
சூறாவளி காற்று
அதிலும் குறிப்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கள் கிழமை மாலை வேளைகளில் சூறாவளி காற்றுடன் கனமழை சுழன்றடித்தது. இதனால் பூமி வெப்பம் குறைந்து, இதமான தட்பவெப்பம் நிலவ ஆரம்பித்துள்ளது. இயற்கையின் கருணையால், இழந்த பெருமையை மீட்டுவிட்டோம் என்று, குதுகலிக்கிறார்கள் பெங்களூர்வாசிகள்.
ஆலங்கட்டி மழை
இந்த நிலையில் இன்று பிற்பகலில் பெங்களூர் வடக்கு பகுதியான எலகங்காவில் மழை ஆரம்பித்தது. இந்த மழை தெற்கு மற்றும் தென்மேற்கு திசையை நோக்கி படிப்படியாக நகர்ந்து பெய்ய தொடங்கியது. எலகங்கா, மானியதா டெக் பார்க், நாகவரா உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வாகனங்களில் செல்வோருக்கு சாலை தெரியாத அளவுக்கு நிலைமை மாறிப்போனது. ராஜாஜிநகர், ஜெயநகர், பசவனகுடி, பன்னேருகட்டா சாலை, பேகூர் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
தொடர் மழை
கத்திரி வெயிலின் வெப்பத்தில் சிக்கியிருந்த பெங்களூர் நகர மக்களுக்கு இந்தத் தொடர் மழை பொழிவு ஆறுதலைத் தந்துள்ளது. கோடை காலத்தில் இவ்வாறு தொடர்ச்சியாக மழை பொழிவை பெற்று வரும் ஒரே தென்னிந்திய நகரம் என்ற பெருமையையும் பெங்களூர் பெற்றுள்ளது.