ரபேல் ஒப்பந்தம்.. ராகுல் அப்படி சொல்கிறார்... இந்த மாதவன் இப்படி சொல்கிறாரே.. என்னதான் நடக்கிறது?
பெங்களூர்: ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தின் நிதி நிலை வலுவான நிலையில் உள்ளது என அந்த நிறுவனத்தின் தலைவர் மாதவன் தெரிவித்தார்.
ரபேல் ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு தராமல் அம்பானி நிறுவனத்திற்கு மோடி கையெழுத்திட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையே நாடாளுமன்றத்திலும் விவாதத்தின் போது எழுப்பினார்.
மேலும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாததால் அவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நிலை உள்ளதாக ராகுல் குற்றம்சாட்டினார். மேலும் அவர்களது நிதி நிலையும் மோசமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
ஹிந்துஸ்தான்
இது மட்டுமல்லாமல் ரபேல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் குறித்து ஏரோ ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் தலைவர் மாதவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மும்முரம்
அவர் கூறுகையில் ரபேல் விமான ஒப்பந்தத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ரபேல் விமான விவகாரத்தில் நிறுவனம் தலையிட விரும்பவில்லை. நாங்கள் பாட்டுக்கு எங்கள் பணியில் மும்முரமாக இருந்தோம்.
நேரடி கொள்முதல்
ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தின் நிதி நிலை வலுவான நிலையில் உள்ளது. ரபேல் விமானம் நேரடி கொள்முதல் என்பதால் அதன் ஆப்செட் தயாரிப்பில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. அது போல் எங்கள் நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகளும் வேறு நிறுவனத்துக்கு செல்லவில்லை.
ஹெச்ஏஎல்
அரசியல் சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறோம் என்றார் மாதவன். ரபேல் விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விமானம் தயாரிக்க ஒப்பந்தம் கொடுத்ததால் உள்நாட்டு நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில் மாதவன் பேட்டி அளித்துள்ளார்.