தாத்தா, மகன்கள், பேரன்கள், மருமகள்.. அடேங்கப்பா.. இப்படி ஒரு குடும்ப அரசியலை பார்த்திருக்க முடியாது
பெங்களூர்: சம கால அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு குடும்ப ஆதிக்க அரசியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது. அப்படியான ஒரு ஆதிக்கம் கர்நாடகாவில், தேவகவுடா குடும்பத்தால் முன்னெடுக்கப்படுகிறது.
எப்படி பட்டவர்த்தனமாக குடும்ப அரசியல் முன்னெடுக்கப்பட்டு, அது வெற்றியும் பெறுகிறது, என்று அறிந்தால், உங்களுக்கு ஆச்சரியமே வந்துவிடும். அந்த அளவுக்கு இங்கு எல்லாம் வெளிப்படை.
தமிழகம் போல கர்நாடகாவில் இருமுனை போட்டி கிடையாது. மும்முனை போட்டி கொண்ட மாநிலம். காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் என்ற மும்முனை போட்டிதான், ம.ஜ.தவின் வாரிசு அரசியலுக்கு ஊக்கம் தரும் அம்சம்.
அமமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு ஐஸ்.. ஈர்க்கப் பார்க்கிறாரா!
ஜாதி அரசியல்
மக்கள் தொகை அடிப்படையில் கர்நாடகாவில், லிங்காயத்துகளுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய ஜாதி ஒக்கலிகர்கள். அந்த ஜாதிக்கான கட்சியாக ம.ஜ.த தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளதால் தொடர்ச்சியாக கணிசமான தொகுதிகளை அதனால் வெல்ல முடிகிறது. சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 25 தொகுதிகள் கேரண்டி. லோக்சபா தேர்தலில் 2 தொகுதியாவது சொல்லியடிப்பார்கள். சில தேர்தல்களில் இதைவிட சற்று கூடுமே தவிர, குறையாது. இதை வைத்தே, கூட்டணிகளை அமைத்து ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிடுவது ம.ஜ.த வாடிக்கை. இப்படித்தான் ஒரு காலத்தில் பிரமதராகவே ஆனார் தேவகவுடா.
பிரதமர், முதல்வர் பதவிகள்
தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா என்றபோதிலும், ஜாதி வட்டத்தை தாண்டியும், குமாரசாமிக்கு இருக்கும் கணிசமான மக்கள் செல்வாக்கால், தேவகவுடாவால், அவர் முதல்வராக முன்னிறுத்தப்பட்டு வருகிறார். இப்போது உட்பட இருமுறை முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டார் குமாரசாமி.
குமாரசாமி மனைவி
தேவகவுடாவை பொறுத்தளவில் ஹாசன் தொகுதி எம்பியாக உள்ளார். ரேவண்ணா, குமாரசாமி அமைச்சரவையில் மந்திரி. அதுவும், பலம் மிக்க பொதுப்பணித்துறை அமைச்சர். இத்தோடு முடியவில்லை இந்த அரசியல். குமாரசாமி மனைவி அனிதாவும் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். ராம்நகர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரும் சட்டசபைக்குள் தனது கணவர், மைத்துனருடன் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ளார். அனிதா பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இது 2வது முறை என்பது கவனிக்கத்தக்கது.
அடுத்த தலைமுறை
இரு தலைமுறையினர் பதவியில் அமர்ந்துவிட்ட நிலையில், இனியாவது, மஜதவின் பிற தலைவர்களும் வாய்ப்புகளை பெறுவார்கள் என்று நினைத்தால் அங்கும் ஏமாற்றம். ரேவண்ணா மகன், பிரஜ்வல் ஹாசன் தொகுதியிலும், குமாரசாமி மகன், நிகில் கவுடா, மண்டியா தொகுதியிலும் லோக்சபா தேர்தலுக்காக களமிறக்கப்படுகிறார்கள். இதில் தேவகவுடாவின் கண்ணீர் சிந்தல்கள், உருக்கமான உரைகள் மசாலா தடவி மக்களை உசுப்பேற்றி வைத்துள்ளன. அனேகமாக அவர்களும் ஜெயித்து விடுவார்கள்.
திறமை
அரசியலில் இருந்து விலகப்போவதாக இதுவரை கூறி வந்த தேவகவுடாவும், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருக்கிறாராம். பெங்களூர் வடக்கு தொகுதி அவர் இலக்கு. காங். கூட்டணியில், ம.ஜ.த பெற்ற 8 லோக்சபா தொகுதிகளில், 2 தொகுதிகள் தலா 1 பேரன்களுக்கு, 1 தொகுதி தாத்தாவுக்கு. எஞ்சியவைதான், கட்சியின் பிற மூத்த தலைவர்களுக்கு. எப்படி இருக்குது டீல்? சத்தமேயில்லாமல் ஒரு மாபெரும் வாரிசு அரசியல் நமது அண்டை மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதை மக்களை ஏற்க வைப்பதில்தான் இருக்கிறது தேவகவுடா குடும்பத்தின் சாணக்கியத்தனம்.