நீங்களே கைவிட்டுட்டீங்களே.. குமுறி அழுத குமாரசாமி.. தொண்டர்கள் ஆவேச கோஷம்.. கர்நாடகாவில் பரபரப்பு
Recommended Video
பெங்களூர்: மண்டியா மக்களை நான் நம்பினேன், ஆனால், என்னை கைவிட்டுவிட்டனர் என்று கூறி, கர்நாடக முன்னாள் முதல்வர், குமாரசாமி கண்ணீர்விட்டு அழுதார்.
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்கு, அரசியலில், சமீபத்தில் இரண்டு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
முதலில், 2019 லோக்சபா தேர்தல். அப்போது குமாரசாமி தனது மகன் நிகில் கவுடாவை முதல் முறையாக லோக்சபா தேர்தலில் களமிறக்கினார்.
தான் சார்ந்த ஒக்கலிகர் ஜாதியை சேர்ந்தவர்கள் பெருமளவில் இருக்க கூடிய மண்டியா லோக்சபா தொகுதியில், அவர் மஜத சார்பில் களமிறங்கினார்.
அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுதான். இருந்தும், அத்தேர்தலில் சுயேச்சையாக, பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரீஷ் மனைவி சுமலதாவிடம், நிகில் கவுடா தோற்றுப்போனார்.
முதல்வர் பதவி
இந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாக, கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசும் கலைந்து போனது. ராஜினாமா செய்த 3 மஜத எம்எல்ஏக்களில், மண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தொகுதியை சேர்ந்த நாராயண கவுடாவும் ஒருவர். குமாரசாமிக்கு இது அடுத்த பெரிய அதிர்ச்சியாகும்.
மும்முனை போட்டி
இந்த நிலையில்தான் டிசம்பர் 5ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், மஜத என மும்முனை போட்டி நிலவுகிறது. மண்டியா, ராம்நகர் ஆகிய இரு அண்டை மாவட்டங்களும், மஜத கோட்டையாக கருதப்பட்டவை. எனவே, இப்போது பாஜக சார்பில் போட்டியிடும் நாராயண கவுடாவை வீழ்த்தி பாடம் புகட்ட வேண்டும், தங்கள் கட்சி பலத்தை காட்ட வேண்டும் என குமாரசாமி தீவிரமாக முயன்று வருகிறார்.
ஜென்மம் முழுக்க
இன்று கே.ஆர்.பேட் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, உணர்ச்சிவசப்பட்ட குமாரசாமி கண்ணீர் சிந்தினார். குமாரசாமி தனது பிரச்சாரத்தின்போது, நாராயண கவுடா, முன்பு ஒருமுறை தனக்கு எழுதிய கடிதத்தை வாசித்து காட்டினார். அந்த கடிதத்தில், "என்னை 2 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு தந்தீர்கள். இந்த ஜென்மம் முழுக்க நான் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன்" இவ்வாறு நாராயண கவுடா எழுதினார். இதுதான் இப்போது எனக்கு கண்ணீரை வரவழைக்கிறது.
அழுத குமாரசாமி
இவ்வாறு குமாரசாமி பேசியபோது அவர் குரல் உடைந்தது. கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. தனது கையில் வைத்திருந்த துண்டை எடுத்து, கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டார். உடைந்த குரலில், குமாரசாமி பேசியதை பாருங்கள்: அதிகாரம் போய்விட்டது என்பதற்காக நான் அழவில்லை. எனது மனதில் உள்ள வலியால் அழுகிறேன். நான் என்ன தப்பு செய்தேன்? எனது மண்டியா மக்களே என்னை கைவிட்டுவிட்டீர்களே? எனது மகனை ஆசைப்பட்டு தேர்தலில் போட்டியிட வைக்கவில்லை. நீங்கள் வலியுறுத்தியதால்தான் போட்டியிட வைத்தேன். எனது மகன் தோற்றதை நினைத்து நான் வருத்தப்படவில்லை. நீங்களே கைவிட்டுவிட்டீர்களே என்பதுதான் வருத்தம்.
|
எதற்காக அரசியலில் இருக்க வேண்டும்?
மண்டியாவில் தோற்றது முதல், நான் அரசியலில் இருக்கனுமா என நினைக்க தொடங்கிவிட்டேன். ஏழைகளுக்காக போராடத்தான் இன்னும் அரசியலில் இருக்கிறேன். 2 வேளை சாப்பாடுக்காக நான் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? யாரை நம்பி நான் அரசியல் செய்ய வேண்டும், எனது மக்களே என்னை கைவிட்ட பிறகு தன்மானத்தை இழந்து அரசியல் செய்ய வேண்டுமா? கடந்த ஒரு வாரமாக நான் மாநிலம் முழுக்க தீவிர சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். 2 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உடம்பு எனக்கு, அப்படியிருந்தும் இந்த மக்களுக்காகத்தானே நான் சுற்றுப் பயணம் செய்கிறேன். இவ்வாறு குமாரசாமி தழுதழுத்த குரலில் பேசினார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள், "நாங்கள் இருக்கிறோம்.." என கோஷமிட்டனர்.