அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு? மாஸ்டர் பிளான் ரெடி
Recommended Video
பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், அதில் 15 பேர் மும்பையில் உள்ள ஹோட்டலில் தங்கி உள்ளனர்.
அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்கள் மீது, சபாநாயகர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
அந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அவர்கள் ராஜினாமா கடிதங்கள் மீது விரைந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும், சட்டசபைக்கு வர அவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டது.
கட்டாயம் என்பதன் பொருள்
கட்டாயப்படுத்த கூடாது என்றால், விப் உத்தரவை பிறப்பித்து சட்டசபை வரவழைக்க முடியாது என்ற அர்த்தமும் வருகிறது. இதைத்தான் பாஜகவும் கூறி வருகிறது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், குமாரசாமி அரசு கவிழுவது உறுதி. எனவேதான், அதை தள்ளிப்போட ஆளும் கட்சி இரண்டும் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றன.
கால விரையம்
வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதியளித்தார். குமாரசாமியும், தீர்மானத்தை தாக்கல் செய்தார். ஆனால், ஆளும் கட்சி தரப்பில் வெவ்வேறு பிரச்சினைகள் குறித்து பேசி கால விரையம் செய்ததை பார்க்க முடிந்தது. எனவே நேற்று மீண்டும் அவை கூடியபோதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என நினைத்து இரவெல்லாம் பேரவையிலேயே தங்கி தர்ணா நடத்தினர் பாஜக எம்எல்ஏக்கள். ஆளுநர் மூலமாகவும் முதல்வருக்கு கடிதம் எழுத வைத்து அழுத்தம் கொடுத்து பார்த்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஆனால், எதற்கும் சபாநாயகர் இணங்கவில்லை. இன்றும், நாளையும் சட்டசபைக்கு விடுமுறை. இரு நாட்களில் அதிருப்தி எம்எல்ஏக்களில் ஆறு பேரையாவது திரும்ப அழைத்து வந்துவிட்டால் அரசு தப்பும் என்ற திட்டத்தில் ஆளும் தரப்பு உள்ளது. ஆனால் அது பெரிய கஷ்டம் என்பது அவர்களுக்கு தெரியும்.
இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் விப் உத்தரவு பற்றி விளக்கம் கேட்டு காங்கிரஸ் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது. விப் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றால் அது அரசியல் சாசனத்தின் 10 வது அட்டவணையில் தரப்பட்ட உரிமையை மீறும் செயல் என்பது மனுவின் சாராம்சம்.
விப் அஸ்திரம்
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படலாம். எனவே இந்த வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி திங்கள்கிழமையும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என ஆளும் தரப்பு கோரிக்கை வைக்கும். அதையும் சபாநாயகர் ஏற்பார் என்றுதான் தெரிகிறது. இதன்பிறகு விப் உத்தரவு பற்றி நாங்கள் எதையும் சொல்லவில்லை என்ற ஒரு விளக்கத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தால், விப் உத்தரவை பிறப்பித்து, மும்பையிலுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டசபைக்கு வர வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுவிடும் கர்நாடக அரசு. ஏனெனில் விப் உத்தரவை மீறினால் அரசு கவிழும் என்பதோடு, மீறிய எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள், அவர்கள் நடப்பு சட்டசபை காலத்தில் அமைச்சராக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அச்சத்தால் அதிருப்தியாளர்களில் பாதி பேராவது அரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்று கணக்கு போடுகிறது குமாரசாமி அரசு.