ஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார்? எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மனைவி மைத்ரா தேவி மரணம் தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராம்நகரில், இன்று நிகழ்ச்சியொன்றில் பேசியபோது குமாரசாமி இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்த நாட்டில் என்னென்னவோ பெரிய விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன. நான் இந்த ஊடக நண்பர்களிடம் கேட்க விரும்புகிறேன்.. ஓர் அடி அகலமும், ஆழமும் கொண்ட ஒரு குடிநீர் தொட்டிக்குள் கால் தவறி விழுந்து யாரும், இறந்ததாக வரலாறு உண்டா? அப்படி சொன்னவர்களையும் இந்த நாட்டு மக்கள் மெய்ச்சிகொண்டுதான் இருக்கிறார்கள்"
இவ்வாறு குமாரசாமி கூறியதும் அவரது ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதேநேரம் எடியூரப்பாவின் பெயரை குமாரசாமி இதில் நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால் அவர் யாரை சொல்கிறார் என்பதை கர்நாடக மக்கள் புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
2004 ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி எடியூரப்பாவின் மனைவி மைத்ராதேவி, எடியூரப்பாவின் இல்லத்தில் உள்ள நிலத்தடி நீர் தேக்க தொட்டியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கால் தவறி மைத்ரா தேவி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இதுதொடர்பாக அவ்வப்போது ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. வழக்கறிஞர் சேஷாத்திரி என்பவர் 2009ஆம் ஆண்டு இதுதொடர்பாக ஷிமோகா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை தகவல்படி எடியூரப்பாவின் மனைவி விழுந்து பலியான நிலத்தடி நீர் தேக்கத் தொட்டி 8 அடி ஆழம் கொண்டது. ஆனால், இதிலும் குமாரசாமிக்கு சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. வெறும் ஒரு அடி ஆழம் தான் என்கிறார் அவர். வெறும் ஒரு அடி ஆழத்தில் பொதுவாக நிலத்தடி நீர் தேக்க தொட்டிகளை யாரும் நிறுவுவது கிடையாது. இருப்பினும் குற்றச்சாட்டுக்காக குமாரசாமி இவ்வாறு தெரிவித்திருக்கிறார் கூடும் என்று தெரிகிறது. ஆனால் மைத்ரா தேவி மரணத்தில், தொடரும் மர்மம் இன்னும் எடியூரப்பாவை விட்டபாடில்லை என்பது மட்டும் உண்மை.