கெடு விதித்த ஆளுநருக்கு செக் வைத்த குமாரசாமி! உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Recommended Video
பெங்களூர்: குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், முதல்வர் குமாரசாமி, சட்டசபையில் தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக ஆளுநர் கெடு விடுத்தார்.
நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை குமாரசாமி தாக்கல் செய்திருந்தாலும், பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதமும், அமளியும் நீடித்தது. எனவே நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே, சபாநாயகர் துணையுடன், கால விரையம் செய்கிறார்கள் என்று பாஜக சார்பில், ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் நேற்று புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் சபாநாயகருக்கு நேற்று மதியமே ஒரு கடிதம் எழுதி, இன்று (வியாழக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவு செய்ய பரிசீலனை செய்யுங்கள் என தெரிவித்தார்.
அதேநேரம், நேற்று சட்டசபை அலுவல் நேரம் முடிந்ததும், இன்று காலை 11 மணிக்கு அவையை ஒத்தி வைத்தார், சபாநாயகர். இதையடுத்து இரவோடு இரவாக, முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார் ஆளுநர். அதில், வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார் ஆளுநர். அப்படியும் நடக்கவில்லை. எனவே இன்று மதியம் மீண்டும் குமாரசாமிக்கு கடிதம் எழுதிய ஆளுநர், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள், நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆளுநரின் கெடுவால், குமாரசாமி அரசு சிக்கலில் மாட்டியுள்ளது. எனவே, ஆளுநரின் உத்தரவு சரியில்லை, இது சட்டசபை மாண்புக்கு எதிரானது என்று, கூறி, உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதன் மூலம், இன்றும் அவை நடவடிக்கை திங்கள்கிழமைக்கு இழுத்தடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆளுநர் உத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடாது என்பதற்காக, வழக்கு தொடர்ந்துள்ளார் குமாரசாமி என்கிறார்கள்.