கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் முதல்வர் பதவியில் இருந்து ஹெச்டி குமாரசாமி பதவி விலகினார். இதனால் நாளை மறுநாள் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா அம்மாநில முதல்வராக பதவியேற்கிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வந்தார்.
ஆனால் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதன் பின்னர் தான் பாஜகவின் ஆட்டமே ஆரம்பம் ஆனது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் படுதோல்வி.. ராஜினாமா செய்தார் குமாரசாமி.. காபந்து முதல்வராக தொடர்வார்!
சமாதான முயற்சி
அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று கூறி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 16 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் இந்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. அதேநேரம் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர்.
நீண்ட விவாதம்
ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டியை தவிர மற்ற 15எம்எல்ஏக்களும் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனிடையே சட்டசபையில் தானாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்தார். ஆனால் ஒரு வாரமாக நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம், ஆளுநர், பாஜகவின் நெருக்கடிகளால் இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
அரசு கவிழ்ந்தது
இதில் ஆளும் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 பேரும் எதிராக 105 பேரும் வாக்களித்தனர். இதனால் குமாரசாமி அரசு கர்நாடகாவில் கவிழ்ந்துள்ளது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவாக குமாராசாமி ஆளுநரிடம் கடிதம் அளித்தார்.
வியாழன் அன்று பதவியேற்பு
இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கர்நாடகாவில் பொறுப்பேற்கிறது. எடியூரப்பா நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளார். இதனால் கர்நாடகாவில் நிலவி வந்த உச்சகட்ட பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்கும் வரை காபந்து முதல்வராக குமாரசாமி தொடர வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
4வது முறை முதல்வர்
இதன் மூலம் 76 வயது எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராக நான்காவது முறையாக பதவியேற்கிறார். முன்னதாக எடியூரப்பா கடந்த 14 மாதங்களுக்கு முன்பு முதல்வராக பதவியேற்றார். ஆனால் சில நாளிலேயே மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகினார். கர்நாடகாவின் முதல்வராகும் எடியூரப்பா இதுவரை ஒரு முறை கூட 5 ஆண்டுகள் ஆட்சியை முழுமையாக இருந்தது இல்லை.