மகிழ்ச்சியாக முதல்வர் பதவியை துறக்க தயார்.. சட்டசபையில் குமாரசாமி பரபரப்பு பேச்சு
Recommended Video
பெங்களூர்: நான் எந்த ஒரு கவலையும் இன்றி மகிழ்ச்சியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்டசபையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார்.
அடுத்தடுத்து 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது, குமாரசாமி அரசு. ஆனால், எப்படியும் அவர்கள் மனதை மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை, தானாக முன் வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார் குமாரசாமி. ஆனால் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.
எனவே நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட எவ்வளவோ முயன்றது ஆளும் தரப்பு. ஆனால் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்தது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி பதில் அளித்து பேசினார்.
குமாரசாமி பேச்சு
அப்போது அவர் கூறியதாவது: நான் சட்டசபையின் நிகழ்வில் பங்கேற்காமல் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அமர்ந்து கொண்டு அரசு பணத்தை, கடைசி நேரத்திலும் வீணடித்து கொண்டிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், நான் அரசு பணத்தை வீணடிக்க அங்கு அமர்ந்திருக்கவில்லை. அரசை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று அங்கிருந்தபடியே முயற்சி செய்தேன். இதில் மூடி மறைக்க எதுவுமில்லை.
டிவி சேனல்கள்
சமூக வலைத்தளங்கள் மூலமாக, என் மீது பாஜக அவதூறு பரப்பி வருகிறது. ஆனால், இந்த நாட்டின் கலாச்சாரத்தை அழித்தொழிப்பதற்கு வந்துள்ளதுதான் சமூக ஊடகம். ஒரு பக்கம் டிவி மீடியாக்களும் தங்கள் வியாபாரத்திற்காக எந்த அளவுக்கும் இறங்கிப் போக தயாராகிவிட்டன. இதற்கு பதிலாக அவர்கள் வேறு ஏதாவது தொழில் செய்யலாம். நான் வீட்டுக்கு செல்லும் போது கூட, என் பின்னால் டிவி சேனல் கேமரா ஒன்று பின்தொடர்ந்தது என்பதை பார்த்தேன். தனிமை என்பது எங்களுக்கு எங்கே இருக்கிறது? டிவி சேனல்களில் தர்மம் என்பது சுத்தமாக கிடையாது. இன்னும் அது கொஞ்சம் ஒட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது பிரிண்ட் மீடியாவில் மட்டுமே.
அதிகாரிகள் சூப்பர்
கடந்த ஓராண்டாகவே, ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலைந்துவிடும் என்ற ஒரு சூழ்நிலை ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டு கொண்டே வந்தது. இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, அதிகாரிகள் நியாயமான முறையில் பணியாற்றினர். கடந்த ஓராண்டில் ஏதாவது நல்ல பணிகள் இந்த மாநிலத்தில் நடைபெற்று இருக்குமானால், அதற்கு முழு காரணம் அரசு அதிகாரிகள் தான். அந்த அதிகாரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகிழ்ச்சி
இதுபோன்ற ஒரு அரசியல் சூழ்நிலை உருவாகி விட்டதற்காக, வாக்காளர்களுக்கு, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் மகிழ்ச்சியாக முதல்வர் பதவியை துறக்க தயாராக உள்ளேன். எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை. இவ்வாறு குமாரசாமி பேசினார். இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா அல்லது அதற்கு முன்பாகவே குமாரசாமி ராஜினாமா செய்வாரா என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.