பெங்களூருவில் கனமழை... சாலைகளில் பெருகிய வெள்ளம் - போக்குவரத்து நெரிசல்
காற்றழுத்த தாழ்வு நிலையால் பெங்களூருவில் பல மணி நேரம் விட்டு விட்டு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருகியது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெங்களூரு: கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. பல மணி நேரம் விட்டு பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடகாவிற்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வட கர்நாடகவில் உள்ள 4 மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பல கிராமங்கள் தனி தனி தீவுகளாக காட்சி அளிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கும் வசதி இன்றி தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் மேகங்கள் கூடி கருமையாக மாறியது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது.
பெங்களூரு நகரில் மெஜஸ்டிக், அல்சூர், எம்.ஜி.ரோடு, வில்சன் கார்டன், ஜெயநகர், பொம்மனஹள்ளி, பேகூர், சில்க்போர்டு, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்க பாதைகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாயினர். மழை காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. வாகன நெரிசலை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
செவ்வாய் இரவு முழுவதும் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. பெங்களூருவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவானந்தா சர்க்கில், கெங்கேரி, உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு வெள்ளநீரை அகற்ற கோரி தொலைபேசியில் புகார்களை பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியிருப்பு கட்டிடங்களில் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். வீடுகளில் கழிவு நீருடன் புகுந்த மழை நீரை பாத்திரங்களில் எடுத்து வெளியேற்றினர். இதனால் தூக்கத்தை தொலைத்தனர் பெங்களூருவாசிகள்.
இன்று முதல்.. சென்னை-பெங்களூர் இடையே ஏசி டபுள் டெக்கர் ரயில் சேவை துவங்கியாச்சு
மேற்கு மற்றும் தெற்கு பெங்களூருவில் 11 மிமீ முதல் 71.5 மிமீ வரை கனமழை பெய்துள்ளதாக கர்நாடகா மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.