ஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி
Recommended Video
பெங்களூர்: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் இந்தி திணிப்புக்கு எதிராக கன்னட அமைப்பினர் சார்பில் போராட்டம் வெடித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்தி தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் போராட்டம் வெடித்துள்ளது. "ஹிந்திதான், நாட்டு மக்களை இணைக்கும், மொழி" என்று அமித் ஷா தெரிவித்த கருத்து கன்னட அமைப்பினரின் கோபத்தை தூண்டியுள்ளது.
கன்னட அமைப்பினர் இன்று ஊர்வலமாக நகரின் மையப்பகுதியில் உள்ள டவுன் ஹால் பகுதிக்கு வந்தனர். ஹிந்திக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும், அவர்கள் கோஷமிட்டனர்.
இதுபற்றி போராட்டக்குழுவை சேர்ந்த நஞ்சப்பா என்பவர் கூறுகையில், "தென் மாநிலங்களை பொறுத்தளவில், ஹிந்தி என்பது அன்னிய மொழி. இங்கே அதிகம் பேருக்கு அந்த மொழி அறிமுகம் இல்லை. வெளிநாட்டு மொழி போலத்தான் ஹிந்தி எங்களுக்கு. அப்படியிருக்கும்போது நாங்கள் எதற்காக ஹிந்தியை கற்க வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.
போராட்டக்காரர்கள் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய, பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். மஜத தலைவரும், முன்னாள் முதல்வருமான, குமாரசாமியும், ஹிந்தி திணிப்பை கண்டித்துள்ளார்.
#StopHindiImposition என்ற வார்த்தையை தென் இந்தியர்கள், தேசிய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். இதில் பலரும் தமிழர்கள் மற்றும் கன்னட நெட்டிசன்களாகும்.
ஹிந்திக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதிப்பது இது முதல் முறை கிடையாது. 2017ம் ஆண்டு பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி வாசகங்களை தார் பூசி அழித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.