இன்னும் தொடரும் ஆணவக் கொலை.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொன்று கால்வாயில் வீசிய பெற்றோர்..
Recommended Video
பெங்களூர்: மாற்று சாதி இளைஞரை மகள் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர், மகள் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கொன்று கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுக்கா எல்லேமாலா கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (30). இவர் கேவிஎம் தொட்டியைச் சேர்ந்த ஜோதியை (25) காதலித்து வந்தார்.
இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் ஜோதியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து முத்துராஜ் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் ஜோதியின் குடும்பத்தினர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஜோதி, முத்துராஜை காதலித்து வந்தார்.
14-ஆம் தேதி
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜோதி வீட்டை விட்டு வெளியே வந்து முத்துராஜை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் வசித்து வந்தார். ஜோதி கர்ப்பமான நிலையில் இருவரும் கடந்த 14-ஆம் தேதி எல்லேமாலா கிராமத்திற்கு வந்தனர்.
ஜோதி தனியாக இருந்தார்
அப்போது முத்துராஜும், அவரது பெற்றோரும் வெளியே சென்றிருந்தனர். இதையடுத்து ஜோதி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோர் கிருஷ்ணய்யா, வெங்கட லட்சுமம்மா, தாத்தா கோவிந்தய்யா, பாட்டி திருமம்மா, ஜோதியின் மாமா கைவாஸ் ஆகியோர் முத்துராஜின் வீட்டுக்கு சென்று ஜோதியிடம் தகராறு செய்தனர்.
கால்வாயில் உடலை வீசிய கொடூரம்
பின்னர் அவரை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து காரில் கடத்தி சென்றனர். ஜோதியை கொள்ளேகால் தாலுக்கா சிவனசமுத்திரா பகுதியில் ஓடும் கால்வாய் அருகே அழைத்து சென்றதுடன் அவரது கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துவிட்டனர். பின்னர் அவரது உடலை கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.
தலைமறைவு
தகவலறிந்த போலீஸார் ஜோதியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் தேடி வருகிறார்கள். கர்ப்பிணி என்றும் பாராமல் பெற்ற மகளை கொலை செய்ய இந்த பெற்றோருக்கு எப்படிதான் மனம் வந்ததோ.