ஆக்சிஜன் தட்டுப்பாடு.. நோயாளிகளை வெளியேற்றும் மருத்துவமனைகள்.. இந்த அவலம் எங்க தெரியுமா?
பெங்களுரு: கர்நாடக மாநிலம் பெங்களுருவில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளை வெளியேற்றும் அவல நிலை நீடித்து வருகிறது.
Recommended Video
இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெங்களூரில் உள்ள தகன மேடைகள் எப்போதும் பிசியாக உள்ளன. தகன மேடைக்கு அருகில் உடல்களுடன் ஏராளமானோர் காத்து கிடப்பதை பார்க்க முடிகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிவேகமாக சென்று வருகிறது. நாடு முழுவதும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா... 8 மாதங்களில் இரண்டாவது முறையாக வைரஸ் பாதிப்பு
ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரிப்பு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் பெரும்பலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டன. இதனால் பல நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சை மிகவும் அவசியமாகும்.ஆனால் தற்போது தேவை மிகவும் அதிகமாக இருப்பதால் நாட்டின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
நோயாளிகள் வெளியேற்றும் அவல நிலை
டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதால் உடனடியாக பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று டெல்லி அரசு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளை வெளியேற்றும் அவல நிலை நீடித்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு 10 சிலிண்டர்கள் தேவைப்பட்டு வந்த நிலையில் தற்போது 100 க்கும் மேற்பட்டவை தேவைப்படுகின்றன.
பல மருத்துவமனைகளில் இதுதான் நிலைமை
நகரின் பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள் என்று அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20 கொரோனா நோயாளிகளைக் கொண்ட கே.ஜி.ஹல்லியில் உள்ள மெடிஸ்கோப் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை முடிந்துவிட்டதால் பல நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். ''நாங்கள் மற்ற மருத்துவமனைகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை கடன் வாங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தோம். ஆக்சிஜன் சிலிண்டர்கள் விரைவில் வரும் என்று நம்புகிறோம், பிரார்த்தனை செய்கிறோம்'' என்று மருத்துவமனையின் முதன்மை அதிகாரி டாக்டர் தன்வீர் கான் கூறினார்.
தகன மேடைகளில் டோக்கன் முறை
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பெங்களூரில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெங்களூரில் உள்ள தகன மேடைகள் எப்போதும் பிசியாக உள்ளன. தகன மேடைக்கு அருகில் உடல்களுடன் ஏராளமானோர் காத்து கிடப்பதை பார்க்க முடிகிறது. இதனால் பல தகன மேடைகளில் டோக்கன் முறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பெங்களுரு நகரில் உடல்களை புதைக்க இடமில்லை. இதனால் பெங்களுரு நகர் மற்றும் அருகில் உள்ள புறநகர் பகுதிகளில் உடல்களை புதைக்க அரசு நிலங்களை அடையாளம் காணும்படி மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா, அனைத்து துணை ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.