'அந்த கோலத்தில்' எடியூரப்பா.. ஆபாச சிடியால் அதிர்ச்சி.. சந்தோஷ் 'தற்கொலை முயற்சி' ஏன்? பகீர் தகவல்
பெங்களூர்: கர்நாடக அரசியலில் எடியூரப்பா சம்பந்தப்பட்ட ஆபாச சிடி தொடர்ந்து பெரிய புயலை கிளப்பி வருகிறது.
கடந்த 13ம் தேதி கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார் எடியூரப்பா. இதன் பிறகு இந்த ஆபாச சிடி விவகாரம், மேலும் மேலும் புயலை கிளப்பி வருகிறது.
அதுவும், சொந்தக் கட்சியினராலேயே, பேசப்பட்டு மாநிலம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
அந்தரங்க வீடியோ
பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பி.ஆர்.பாட்டில் யத்னால், ஓபனாக எடியூரப்பா மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். எடியூரப்பா அந்தரங்கமாக இருந்த ஒரு வீடியோ அவரது வீட்டில் வைத்து ரகசியமாக படம் பிடிக்கப்பட்டு அந்த சிடி சில பாஜக எம்எல்ஏக்கள் கைகளுக்குப் போய் உள்ளது. இதை வைத்து மிரட்டிதான் அவர்கள் அமைச்சர் பதவியை வாங்கினார்கள் என்று பகீர் குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
எடியூரப்பா செயலாளர்
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவகுமார் அளித்த ஒரு பேட்டி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. முதல்வரின் அரசியல் செயலாளர் சந்தோஷ் சில வாரங்கள் முன்பு திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பேச்சு எழுந்தது. சிவகுமார் இதுபற்றி கூறுகையில், இந்த ஆபாச சிடி சந்தோஷால் எடுக்கப்பட்டுள்ளது. இது தெரிந்து முதல்வர் தரப்பில் மிரட்டல்கள் வந்ததால், அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
தற்கொலை முயற்சியா?
இந்த சிடியை பாஜக சீனியர் எம்எல்ஏக்களுக்கு சந்தோஷ்தான் கொடுத்துள்ளார். பாஜக மேலிடத் தலைவர்களுக்கும் அந்த சிடியை அனுப்பி வைத்துள்ளார் என்று அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேநேரம் சம்பந்தப்பட்ட சந்தோஷ் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறார். நான் தற்கொலை முயற்சி செய்யவில்லை. வீட்டிலிருந்த ஒரு மருந்தை மாற்றி குடித்துவிட்டேன். மயக்கம் ஏற்பட்டது. எனவே எனது குடும்பத்தார்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நான் தற்கொலை செய்வதற்கு எந்த அவசியமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவுக்கு சிக்கல்
இதுபற்றி முன்னாள் முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறுகையில், பலவீனமாக இருக்க கூடிய ஒரு முதல்வரைத்தான் மிரட்ட முடியும். எடியூரப்பாவை மிரட்டி அமைச்சர் பதவியை வாங்கியிருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது குற்றமாகும். சொந்த கட்சியினரே இப்படி ஒரு ஆபாச சிடி பிரச்சனையை கிளப்பியுள்ளது சந்தேகங்களை எழுப்பி உள்ளதால் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரவையை விஸ்தரிப்பு செய்தாலும் செய்தார், எடியூரப்பாவுக்கு தலைவலி மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.