குமாரசாமி நம்பிக்கையின் பின்னணி இதுதான்.. கர்நாடகாவில் அதிகாலை ஆரம்பித்தது அதிரடி ஆபரேஷன்
Recommended Video
பெங்களூர்: காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் வீடுகளில் அதிகாலையிலேயே அரசியல் ஆபரேஷன் ஆரம்பித்துள்ளது காங்கிரஸ்.
கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத என ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால், குமாரசாமி அரசு இயல்பாகவே கலைந்துவிடும் சூழ்நிலை உள்ளது.
இப்படியான ஒரு சூழல் இருந்தபோதிலும், நேற்று திடீரென, முதல்வர் குமாரசாமி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அத்துமீறிய பேஸ்புக்.. ஆப்பு வச்ச அமெரிக்கா.. தனிநபர் தகவல்களை திருடியதால் ரூ.3 லட்சம் கோடி அபராதம்!
பாஜகவுக்கு பயம்
சட்டசபையில் பேசிய குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாகவும், நேரம் ஒதுக்கி தரும்படியும், சபாநாயகரிடம் வேண்டுகோள்விடுத்தார். முதல்வரின் இந்த கோரிக்கையால், பாஜக அதிர்ச்சியிலுள்ளது. நமது கட்சி எம்எல்ஏக்களை இழுத்துவிடுவார்களோ என்ற பயத்தில், ரிசார்ட்டில் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரையும், இரவோடு இரவாக கூட்டிச் சென்று தங்க வைத்துள்ளார் எடியூரப்பா.
வேறு திட்டம்
ஆனால், முதல்வர் குமாரசாமி, இவ்வளவு உறுதியாக, நம்பிக்கையாக, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கோரிக்கைவிடுத்துள்ளதன் பின்னணியில் வேறு ஒரு திட்டமும் உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களில் கணிசமானோர், நம்பிக்கை வாக்கெடுப்பு தினத்திற்கு முன்பாக, தங்கள் ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றுவிடுவார்கள் என்பதுதான் அந்த நம்பிக்கை.
குமாரசாமி நம்பும் சிவகுமார்
இந்த பணிக்காக, குமாரசாமி பெரிதும் நம்புவது, கர்நாடக காங்கிரசின் "ட்ரபிள் சூட்டர்" என்று அழைக்கப்படும், டி.கே.சிவகுமார்தான். அவர் நினைத்தால், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதில் குமாரசாமி உறுதியாக உள்ளார். அதிகார பலம், பண பலம் என எல்லாம் கொண்டவர் டி.கே.சிவகுமார். இதற்கு முன்பாக குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூர் ரிசார்ட்டில் வைத்து பாதுகாத்து பாஜக கண்களில் விரல் விட்டு ஆட்டியவர். இதனால் பின்னர், வருமான வரி சோதனைகளுக்கும் உள்ளானவர்.
அதிகாலை ஆபரேஷன்
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மேட்டருக்கு வருவோம். மும்பை வரை சென்று எம்எல்ஏக்களை இழுக்க முயன்ற டி.கே.சிவகுமார், இப்போது, அதிகாலை 5 மணிக்கு, அதிருப்தி எம்எல்ஏ வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளார். ஆம், பெங்களூர் கருடாச்சார்பாளையா பகுதியிலுள்ள, ராஜினாமா கொடுத்த, அதிருப்தி எம்எல்ஏ நாகராஜ் வீட்டுக்கு அதிகாலை 5 மணிக்கெல்லாம் போய் கதவை தட்டியுள்ளார் சிவகுமார். லுங்கியுடன் தூங்கிக் கொண்டிருந்த நாகராஜ் எழுந்து வந்து, பார்த்தபோது ஷாக் ஆகிவிட்டார்.
களத்தில் டி.கே.சிவகுமார்
அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலர் மும்பை செல்லாமல் உள்ளனர். அவர்கள்தான் சிவகுமாரின் குறி. காலை 5 மணிக்கு ஆரம்பித்த பேச்சுவார்த்தை 4 மணி நேரத்தையும் தாண்டி ஓடியுள்ளது. இதுபற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்ட நிருபர்களிடம் நாகராஜ் கூறுகையில், இப்போதும் எனது தலைவர் சித்தராமையாதான். ராஜினாமா வாபஸ் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
சக்சஸ்
காங்கிரஸ் தலைவரான சித்தராமையாதான் தனது தலைவர் என நாகராஜ் கூறியுள்ளதை வைத்து பார்த்தால், சிவகுமாரின் அதிகாலை ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ ராமலிங்கரெட்டியின் மகளும் எம்எல்ஏவுமான சவுமியாவை, சட்டசபைக்குள் சந்தித்து அவரது தந்தை ராஜினாமா முடிவை வாபஸ் பெறச் சொல்லி வலியுறுத்தினார் சிவகுமார். தனது அமைச்சர் பதவியை கூட ராமலிங்கரெட்டிக்கு விட்டுக் கொடுப்பதாக கூறினார். இப்படியாக கணிசமான அதிருப்தி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு, ஆட்சியை காப்பாற்றிவிடலாம் என்பது சிவகுமார் திட்டம். குமாரசாமியின் நம்பிக்கையும் இதுவே. சிவகுமாரின் இந்த அதிகாலை அதிரடியால், பாஜக தலைமை நடுக்கத்தில் உள்ளது. குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரக்கூட அதிகாரம் இல்லை என எடியூரப்பா இன்று காலை அளித்த பேட்டி இதை உறுதி செய்வதை போல உள்ளது.