பெங்களூர் டாக்டருக்கு ஓமிக்ரான் பரவியது எப்படி?.. வெளியானது பரபரப்பு தகவல்கள்
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஓமிக்ரான் பாதித்த மருத்துவர் வெளிநாடுகளுக்கு செல்லாததால் அவருக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி அன்று ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் தென்னாப்பிரிக்காவில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. மேலும் அது டெல்டாவை விட கொடியது என்றும் தெரிவிக்கப்பட்டது.
டெல்டா 8 முறை உருமாற்றமடைந்தது. ஆனால் இந்த ஓமிக்ரானோ 32 முறை உருமாற்றமடைந்துள்ளது. இதனால் இது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டன.
டெல்லி வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் சோதனை.. 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!
23 நாடுகள்
இதுவரை 23 க்கும் மேற்பட்ட நாடுகளில் 350 க்கும் மேற்பட்டோருக்கு பரவிய ஓமிக்ரான் இந்தியாவில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை (டிச.2) பரவியது தெரியவந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த பெங்களூரை சேர்ந்த இருவருக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் தொடர்பிலிருந்தவர்களையும் தேடும் பணி நடைபெற்று வந்தது.
மருத்துவமனை
இந்த இருவரில் ஒருவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவர் வெளிநாடுகளுக்கு செல்லவில்லை என தெரியவந்தது. பின்னர் அவருக்கு எப்படி ஓமிக்ரான் பரவியது என அதிகாரிகள் குழப்பமடைந்தனர். ஒரு வேளை ஓமிக்ரான் லோக்கல் பரவலாக மாறிவிட்டதோ என நினைத்தனர்.
நவம்பர் மாதம்
பின்னர் விசாரணையில் அந்த டாக்டர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற்ற டாக்டர்களின் மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்தது. அதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த டாக்டர்களும் கலந்து கொண்டனர். அவர் மாநாட்டின் கடைசி நாளில்தான் பங்கேற்றார்.
அடுத்த நாளே அறிகுறிகள்
அதற்கு அடுத்த நாளே அவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட தொடங்கிவிட்டதாக தெரிகிறது. உடனடியாக அவர் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த மாநாட்டில் இருந்து அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தார்கள்.
எப்படி அடுத்த நாளே?
உடலில் வைரஸ் நுழைந்த மறுநாளே அதற்கான அறிகுறிகள் தென்படுமா என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக உடலில் ஒரு ஃபாரின் பாடி சென்றால் அது குறித்த அறிகுறிகள் வெளியே தெரிய 5 நாட்களாகும். ஆனால் அவருக்கு எப்படி மறுநாளே தெரிந்தது என தெரியவில்லை. இதனால் அவருக்கு ஓமிக்ரான் எப்படி பாதித்திருக்கும் என்பதை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.