பெங்களூர் டூ மதுரை இடையே மட்டும் 13 செக் போஸ்ட்.. நிறுத்தி, நிறுத்தி.. ஹைவே கள நிலவரம்
பெங்களூர்: பெங்களூரில், காலை 4.30 மணி. நல்ல குளிர். வழக்கமாக இதுபோன்ற அதிகாலைவேளையில் ஒரு, செடான் வகை காரில் பயணத்தைத் துவங்கினால், அடுத்த 5 முதல் 6 மணி நேரத்திற்குள் மதுரை மாநகர எல்லை உங்களை அன்போடு வரவேற்கும்.
அப்படித்தான், அன்றும் காரில் கிளம்பினர் ஒரு தம்பதி. ஆனால் மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைவதற்குள், மணி மதியம் 1 மணி இருக்கும்.
ஆம்.. கிட்டத்தட்ட 8.30 மணி நேரப் பயணம். இதற்கு காரணம், காவல்துறையின் அத்தனை கெடுபிடி. ஒன்றல்ல, இரண்டல்ல, 450 கிலோமீட்டர் தூரத்திற்குள் 13 இடங்களில் பரிசோதனை நடக்கிறதாம்.
இத்தனைக்கும், நம்மிடம் பேசிய அந்த நபர் முறைப்படியாக பாஸ் அப்ளை செய்து அதைப் பெற்றுக்கொண்டுதான் பயணித்து இருந்தார். ஆனாலும், ஒவ்வொரு பரிசோதனை பகுதியிலும் ஏகப்பட்ட காலவிரயம் ஆனதாக தெரிவிக்கிறார் அவர்.
இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 2396 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 56845 ஆக உயர்வு!
பழைய நிலைமை இல்லை
ஒரு மாதத்துக்கு முன்பு வரை இப்படி இல்லை தமிழகம்..! ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் வண்டியை நிறுத்துவார்கள். பாஸ் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அப்படியே கிளம்பிப் போகச் சொல்வார்கள் போலீசார். ஆனால், நிலைமை இப்போது அப்படி இல்லை. நேர் தலைகீழாக மாறிவிட்டது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். எனவே கடுமையான கட்டுப்பாடுகள் சமீபகாலமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கம்தான் நீங்கள் மேலே பார்த்த இந்த தகவல்.
தருமபுரியில் சோதனை தீவிரம்
பெங்களூரை தாண்டியதும் வாகனம் அதன் வழக்கமான வேகத்தில் பறக்க தொடங்கியது. சாலைகளும் காலியாக இருந்தன. டோல்கேட் பகுதியில் கூட்டம் இல்லாததால் எளிதாகக் கடக்க முடிந்தது. "மதியம் சாப்பாடு இருக்கட்டும்.. காலை டிபனுக்கே மதுரை சென்று விடலாம் என்றுதான் நினைத்து பயணித்தோம், ஆனால், தருமபுரி மாவட்ட எல்லைக்குள் சென்ற பிறகுதான் தெரிந்தது. இந்த பயணம் அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்பது" என்று நம்மிடம் கூறுகிறார் அந்த பயணி.
கரூரில் கெடுபிடி
ஆம்.. தொப்பூர் கணவாய் பகுதியில் சோதனை அதிகமாக இருக்கிறதாம். இதன் பிறகு, சேலம் மாவட்ட எல்லை பற்றி கேட்கவே வேண்டாம். கரூர் காவிரியாற்று பாலம் அருகேயுள்ள பரிசோதனை மையத்தில் மட்டும், அரை மணி நேரம் பிடிக்கிறதாம். அத்தனை கேள்விகள்.., அத்தனை பரிசோதனைகள் நடக்கின்றன. இத்தனையையும் தாண்டி எந்த ஊர் செல்ல வேண்டுமோ, அந்த மாவட்டத்திற்குள் நுழையும் போதுதான் பரிசோதனைகள் உச்சகட்டத்தை அடைகிறதாம்.
கொரோனா பரிசோதனை அவசியம்
நீங்கள் மதுரை சென்றால், கொரோனா பரிசோதனை அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாய், மூக்கு போன்றவற்றில் கருவிகளைச் செலுத்தி சளி மாதிரி எடுக்கப்பட்டு அவை உடனே பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. யாருக்காவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக நிறுவன தனிமைப்படுத்தல் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நீங்கள் தென்காசி மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமா அங்கும் இதேபோலத்தான். எந்த மாவட்டத்திற்கு நீங்கள் செல்கிறீர்களோ அங்கு அவரை பரிசோதனை இல்லாமல் அனுமதிப்பது கிடையாது.
மாற்று வழிகள்
இது பரவாயில்லை. அவசியமான பரிசோதனை. கொரோனா பரவலை குறைக்க இதுபோன்ற பரிசோதனை நடத்தப்படுவது சரிதான். ஆனால் செல்லும் வழியெல்லாம் அங்கங்கு 15 நிமிடம் 30 நிமிடம் என பாஸ் பரிசோதனைக்காக நிறுத்தினால், அவசர தேவைக்காக செல்வோர் என்ன செய்வார்கள். காவல்துறை இதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டாமா? ஓரிடத்தில் பரிசோதனை நடந்து விட்டது என்றால் அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ஆவணத்தை வாகன ஓட்டிகளிடம் கொடுத்துவிடலாம். அல்லது சீல் போன்ற முத்திரையை கையில் குத்தி விடலாம். இதில் மோசடி செய்ய முடியும் என்று காவல்துறை சந்தேகித்தால், மாற்று வகையில் இதற்கு தீர்வு காண முயற்சி செய்யலாம். கொரோனா பரவலை தடுக்க பாஸ் சோதனை செய்தது போலவும் ஆகும், பயணத்தை தாமதப்படுத்தாதது போலவும் ஆகும். அதைவிடுத்து, தேவையற்ற தாமதம் ஏன்?
கழிவறைகளின் சுத்தம்
பெண்கள், குழந்தைகளுடன் பயணிக்க கூடியவர்கள், இடைவெளியில் உள்ள மோட்டல்களில் கழிவறைகளை பயன்படுத்துவதற்கு அச்சப்படும் நிலை உள்ளது. கழிவறைகள் மூலமாக நோய் தொற்று பரவும் என்பதால் அவர்கள் ஓரிடத்தில் இருந்து கிளம்பி சென்று தாங்கள் சேர வேண்டிய இடத்தை சேர்ந்த பிறகு கழிவறைகளை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது. ஆனால் நீண்ட தூர பயணத்தின்போது இது சாத்தியமில்லை. எனவே சாலையோர மோட்டல்களின் கழிவறைகள், ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி போட்டு சுத்தப்படுத்தப்பட தேவையுள்ளது. ஆனால் அப்படி ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் இடையே கிருமிநாசினி தெளிக்கப்படவில்லை என்கிறார் நம்மிடம் பேசிய பயணி. மோட்டல்களின் சுகாதாரத்தை, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் விசிட் செய்து உறுதி செய்ய வேண்டும்.
உள்ளூர் சாலைகளில் தேவை கண்காணிப்பு
என்னதான் கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தாலும், அந்தந்த மாவட்ட நிலவரத்தை தெரிந்தவர்கள் முக்கிய சாலைகளை தவிர்த்து விட்டு மற்ற மண்ரோடு அல்லது குறுக்கு பாதை வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு ஓட்டம் பிடிக்க கூடிய சம்பவங்களும் அங்கங்கே அரங்கேறுகின்றன. முக்கிய சாலைகளில் மட்டும் இத்தனை தூரம் பாதுகாப்பை பலப்படுத்தி விட்டு. உள்ளூர் சாலைகளை கண்டுகொள்ளாமல் விடுவதும், ஆபத்தில் சென்று முடியும். குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நகரங்களில் இருந்து கிராம பகுதிகளுக்கும் அந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதிலும் காவல்துறை கவனம் எடுத்து, கிராமப்புற சாலைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், கொரோனா இல்லாத, மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும் என்பது நிச்சயம்.