தினம், தினம் கடும் கஷ்டப்படுகிறேன்.. வெளியே சொல்ல முடியல.. குமுறும் கர்நாடக முதல்வர் குமாரசாமி
பெங்களூர்: தினம் தினம், நான் படும் அவஸ்தையை வெளியே சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மஜத கட்சியின் குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், கூட்டணிக்குள் அவ்வப்போது குந்தகம் ஏற்பட்டு வருகிறது. இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் ஒருங்கிணைந்து செல்வதில்லை என்று கூறப்படுகிறது.
எந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா
விஷம்
சில மாதங்களுக்கு முன்பாக பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கண்ணீர் விட்டு கதறி அழுதார் குமாரசாமி. கூட்டணி என்ற விஷத்தை தன்னை அருந்த வைத்து விட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் தோல்வி
இந்த நிலையில், லோக்சபா தேர்தலிலும் இதே கூட்டணி களம் கண்டது. ஆனால் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியை மட்டுமே காங்கிரஸ் மற்றும் மஜத வெற்றி கண்டன. 25 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சுமலதா ஒரு இடத்தையும் கைப்பற்றினர்.
அதிகாரிகள்
இந்த நிலையில், பெங்களூர் அடுத்த சென்னப்பட்டினா, பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குமாரசாமி கூறியதை பாருங்கள்: நான் மக்களுக்கு வழங்கிய, வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். என்னால் நான் படும் கஷ்டங்களை வெளியே சொல்ல முடியவில்லை. தினம்தினம் நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டுதான் பணியாற்றுகிறேன். ஆனால் அதை வெளியே சொன்னால், அரசு ஆட்டம் கண்டு விட்டது என்று, அதிகாரிகள் அலட்சியமாக பணியாற்றுவார்கள் என்பதால், நான் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஆபத்து இல்லை
மேலும் அரசை கலைப்பதற்காக, தனது கட்சி எம்எல்ஏ ஒருவருக்கு பத்து கோடி ரூபாய் வரை பாஜக தரப்பில் இருந்து விலை பேசப்பட்டதாகவும், பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் குமாரசாமி. கூட்டணி தொடர்பாக குமாரசாமி தெரிவித்துள்ள கருத்து பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா பெங்களூரில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், கூட்டணி அரசுக்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பாஜக அது போன்ற முயற்சிகளை எடுத்தாலும் அது பலன் கொடுக்காது என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தனக்கு நெருக்கடி தருவதாக புலம்புவதுதான் குமாரசாமி வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.