பிரியாணிய விடுங்க.. மீன், நாட்டுக் கோழி சாப்பிடுங்க.. குமாரசாமிக்கு சபாநாயகர் கொடுத்த செம டிப்ஸ்
பெங்களூர்: பல கோடி மதிப்புள்ள ஐ.எம்.ஏ (IMA)நிதி ஊழலில் பிரதான குற்றவாளியான மன்சூர் கான் உடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பற்றி சட்டசபையில் இன்று சுவாரசிய வாத, விவாதம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐ.எம்.ஏ. பெயரில் நகைக்கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் முஹம்மது மன்சூர் கான். இவர் கர்நாடகா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து வந்தார்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, ஏராளமானோர் பணம் கட்டினார்கள். இப்படி சுமார் 1,640 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த மன்சூர் கான் பின்னர் துபாய்க்கு தப்பியோடிவிட்டார்.
மன்சூர் கான் கைது
இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் புயலை வீசியது. இதுகுறித்து கர்நாடக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும், அமலாக்க துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மன்சூர் கான், துபாயில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரியவந்தது. இதையடுத்து, டெல்லி வந்தபோது, மன்சூர் கானை பொருளாதார அமலாக்க துறை மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
பிரியாணி
இதனிடையே, மன்சூர் கானுடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரியாணி சாப்பிடுவது போன்ற புகைப்படம் அம்மாநிலத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான உரையில் குறுக்கிட்ட பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான, சி.டி.ரவி, இந்த பிரச்சினையை கிளப்பினார். மக்களின் பணத்தை விழுங்கியவருடன் உட்கார்ந்து பிரியாணி சாப்பிட்டீர்களே உங்களை, இந்த பாவம் சும்மா விடுமா என்று குமாரசாமியை பார்த்து கேள்வி எழுப்பினார்.
ரம்ஜான் விழா
இதுகுறித்து குமாரசாமி பதிலளித்து பேசினார். "குறிப்பிட்ட நபரின் வீட்டுக்கு பிரியாணி சாப்பிட சென்றதாக என்மீது தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. ரம்ஜானின் போது நோன்பு திறக்க எம்எல்ஏ ஒருவரால் நான் அழைக்கப்பட்டேன். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு நான் சென்றேன். அங்கு குறிப்பிட்ட அந்த நபரும் வந்திருந்தார். அப்போதுதான், அவரை முதல் முறையாக நான் சந்தித்தேன். ஆனால், நான் எந்த பிரியாணியையும் சாப்பிடவில்லை. இரண்டு முறை இதயத்தில் பிரச்சினை ஏற்பட்ட பிறகு, நான் அசைவ உணவை சாப்பிடுவதையே விட்டுவிட்டேன்," என்று அவர் தெரிவித்தார்.
மீன், நாட்டுக் கோழி
இதைக் கேட்ட சபாநாயகர் ரமேஷ் குமார், "ஐயோ.. நிஜமாகவா.. அப்படி இருக்காதீங்க. கொழுப்பு உணவை தவிர்க்க நினைத்தால், முழுக்க நான்-வெஜ் சாப்பாட்டை விட்டுவிடாதீர்கள். மீன், நாட்டுக் கோழி சாப்பிடுங்கள். எங்களுக்கு கம்பெனி கொடுக்க ஆள் பலம் தேவை" என்றார்.