எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க முடியாது.. இரவெல்லாம் யோசிக்கனும்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி பேட்டி
பெங்களூர்: அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் ரமேஷ் குமாரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதன்பிறகு, ரமேஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் கர்நாடகாவில் நடக்கும் அரசியல் நடைமுறைகளால் வேதனைப்படுகிறேன். நான் வேண்டுமென்றே அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாக்களை, அங்கீகாரம் செய்வதில், தாமதம் செய்ததாக, சில செய்திகளைப் பார்த்தபோது எனக்கு வேதனை ஏற்பட்டது.
Karnataka Assembly Speaker KR Ramesh Kumar: I need to examine these resignations (of rebel MLAs) all night and ascertain if they are genuine. pic.twitter.com/cLZY5Jk8cn
— ANI (@ANI) July 11, 2019
நான் அலுவலகத்தில் இல்லாத போது, சட்டசபை செயலாளரிடம் 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கியுள்ளனர். நான் கடந்த செவ்வாய்க்கிழமை எனது அலுவலகம் வந்து கடிதங்களை ஆய்வு செய்தேன். அதில், 8 கடிதங்கள் விதிமுறைப்படி வழங்கப்படவில்லை. இதை பற்றி தெரிந்து கொண்டு மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுங்கள் என்று கூறினேன்.
உச்சநீதிமன்றம் உத்தரவால் 'ஓடி' வந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்.. சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர்
மற்ற 5 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் விதிமுறைப்படி சரியாக எழுதப்பட்டிருந்தாலும் கூட அவர்களிடம் நேரில் விசாரித்து, நிர்பந்தம் இல்லாமல், சொந்த முடிவில் ராஜினாமா கடிதம் எழுதப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்.
நான் விசாரிக்காமல், ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டால் தவறு செய்தது போல ஆகிவிடும். எனவே ஒவ்வொருவரிடமாக விசாரணை நடத்துவதற்கு நான் கால அவகாசம் கேட்டிருந்தேன். எனவே நான் திட்டமிட்டு தாமதம் செய்வதாக கூறப்படுவது தவறான வாதம்.
என்னிடம் போன் செய்து கால அவகாசம் கேட்காமல், சபாநாயகர் அலுவலகம் வந்து, ராஜினாமா கடிதத்தை செயலாளரிடம் கொடுத்துவிட்டு, பிறகு ஆளுநரிடமும் சென்று அதை சொல்லிவிட்டு, மும்பையில் சென்று எம்எல்ஏக்கள் தங்கியிருந்தது தேவையற்ற செயல். இதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்ததும் கூட அநாவசியம். என்னிடம் நேரம் கேட்டிருந்தால் நானே அவர்களை சந்தித்திருப்பேன்.
இன்றைய தினம், 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் வந்து என்னிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். அவர்கள் சுய விருப்பத்தின் பேரில் இதை செய்தனரா என்று யோசிக்கவாவது எனக்கு நேரம் வேண்டும். அவர்கள் ராஜினாமாவின் பின்னணியில் என்ன உள்ளது என்பதை யோசிக்க வேண்டும். இன்று என்னை எம்எல்ஏக்கள் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தபோது, நடந்த நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்துள்ளேன். அதை சுப்ரீம் கோர்ட்டிலும் தாக்கல் செய்ய உள்ளேன்.
எனவே இதையெல்லாம் முன்வைத்து, நான் இன்று இரவெல்லாம் நான் யோசிக்க வேண்டும். சட்டம் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். எனவே இப்போது இந்த ராஜினாமாக்கள் மீது எனது முடிவை அறிவிக்க முடியாது.
உச்ச நீதிமன்றமும் கூட இப்படித்தான் முடிவெடுக்க வேண்டும் என்றோ, இன்றே முடிவெடுக்க வேண்டும் என்றோ எனக்கு உத்தரவிடவில்லை. இவ்வாறு சபாநாயகர் ரமேஷ் தெரிவித்தார். எனவே சபாநாயகர் இன்றே எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தில் முடிவெடுக்கப்போவதில்லை என்பதால், கர்நாடக ஆட்சிக்கு இன்னும் சில நாட்கள் எந்த பிரச்சினையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.