இன்னும் மூன்றே மாதங்கள்தான்.. என்ன செய்யப்போறேன் பாருங்க.. எடியூரப்பா அதிரடி பேச்சு
பெங்களூர்: இன்னும் மூன்றே மாதங்களில், கடந்த ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை வழங்குவதாக, பொதுமக்கள் எனது ஆட்சி பற்றி பேசுவார்கள் என்று எடியூரப்பா பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய போது உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
இன்று மாலை 6 மணிக்கு, முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளதாக அறிவித்த நிலையில், பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் குவிய தொடங்கினர்.
இதையடுத்து, காடுமல்லேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய எடியூரப்பா, கட்சி அலுவலகம் வந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், எப்போது இந்த ஆட்சி தொலையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த திருநாள் தற்போது நடந்து விட்டது. பாஜக ஆட்சி தற்போது மலரப் போகிறது. எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் போக்குடன் நடந்து கொள்ளப் போவதில்லை. அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி வழங்குவது எனது நோக்கம்.
இன்னும் மூன்றே மாதங்களில், முந்தைய ஆட்சியாளர்களைவிட, எடியூரப்பா ஆட்சி மிக சிறப்பாக நடக்கிறது, என்று மாநிலம் முழுக்க மக்கள் பேசும் அளவுக்கு ஒரு ஆட்சியை கொடுக்கப் போகிறேன், என்று எடியூரப்பா தெரிவித்தார்.
எடியூரப்பா உரையாற்றியபோது, தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து கட்சி அலுவலகத்தில் இருந்து, நேரடியாக ராஜ்பவன் நோக்கி கிளம்பினார் எடியூரப்பா.