நானாக சென்று அமைச்சர் பதவி கேட்க மாட்டேன்.. கொடுத்தால் ஏற்க தயார்.. கர்நாடக எம்பி உமேஷ் ஜாதவ்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் குல்பர்கா மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளரான உமேஷ் ஜாதவ், தமக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை ஆட்சியமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து வரும் 30-ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை பட்டியல் விரைவில் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோட்டையாக இருந்த குல்பர்கா மக்களவை தொகுதியில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த உமேஷ் ஜாதவ் அபார வெற்றி பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட உமேஷ் 6,20,192 வாக்குகள் பெற்றார். ஆனால் மல்லிகார்ஜுன கார்கே 5,24,740 வாக்குகள் மட்டும பெற்று உமேஷ் ஜாதவிடம் தோல்வியை தழுவினார்.
குல்பர்காவில் அபார வெற்றி பெற்ற பின் எடியூரப்பாவை நேரில் சந்தித்து உமேஷ் ஜாதவ் வாழ்த்து பெற்றார். இந்நிலையில் தனது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உமேஷ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோட்டையாக இருந்தது.
வாழ்த்து பெற நேரில் சென்ற ஜெகன்மோகன்.. கட்டி அணைத்து பூரிப்படைந்த கேசிஆர்
எனது வெற்றியின் மூலம் தற்போது அதனை பாஜகவின் கோட்டையாக மாற்றி கொடுத்துள்ளேன். எனவே இம்முறை மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார். நன்றாக நிர்வாகம் செய்யக் கூடிய திறமை எனக்கு இருக்கிறது.
என் திறமை மீது நம்பிக்கையும் உள்ளது. எனவே மத்திய அமைச்சர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் நானாக வலிய சென்று எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்க மாட்டேன் என்றும் பாஜக எம்பி உமேஷ் யாதவ் கூறியுள்ளார்.
மேலும் கர்நாடகாவில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார் தமக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்துள்ள குல்பர்கா தொகுதி மக்களுக்கு நன்றி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.