நான் எடுக்கும் முடிவு வரலாறாக மாறும்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி பேட்டி
பெங்களூர்: நான் எடுக்கும் முடிவு வரலாறாக மாறும் என்பதால், சட்ட புத்தகத்தை, ஆய்வு செய்துதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை கர்நாடக சட்டசபை செயலாளரிடம் வழங்கினார்.
சபாநாயகர் தனது அலுவலகத்தில் இல்லாத நிலையில், இந்த கடிதங்களை சட்டசபை செயலாளரிடம் அவர்கள் கொடுத்திருந்தனர்.
பெங்களூரில் தொடங்கியது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்.. பங்கேற்காதவர்கள் மீது பாய்கிறது நடவடிக்கை?
அலுவலகம் வருகை
கர்நாடகா அரசியல் பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று சட்டசபையில் உள்ள தனது அலுவலகம் வந்தார். சபாநாயகர் தனது இறுதி முடிவை என்று எடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபைக்கு வெளியே அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்: யார், யார் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளார்களோ, என்ன காரணம் சொல்லி உள்ளார்களோ, எதுவுமே எனக்கு தெரியாது. நான் இப்போதுதான் அலுவலகத்தின் உள்ளே செல்ல போகிறேன். அலுவலகம் சென்ற பிறகு கடிதங்களை பரிசீலனை செய்வேன்.
வரலாறு
சட்டப் புத்தகங்கள் படித்து பார்த்து ஆய்வு செய்துதான் எனது முடிவை எடுக்க முடியும். நான் எடுக்கக் கூடிய முடிவு என்பது வரலாறாக மாறக்கூடியது என்பதை நான் அறிந்துள்ளேன். எனவே பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலைமையில் உள்ளேன். எனக்கு யாரும் தலைவர் கிடையாது. அரசியல் சாசனம் மட்டுமே எனது தலைவர். அது என்ன சொல்கிறதோ அதன்படி, நான் அடுத்த கட்ட முடிவை அறிவிக்க உள்ளேன். இவ்வாறு ரமேஷ் குமார் தெரிவித்தார்.
ஆட்சி கலையும்
சபாநாயகர் ரமேஷ்குமார், இதுவரை எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்கவில்லை என்பதால், கர்நாடக அரசு பாதிப்பின்றி தொடர்ந்து கொண்டு உள்ளது. ஒருவேளை, அவர் அந்த ராஜினாமா கடிதங்களை ஏற்றால், அடுத்த நொடியே கர்நாடக அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். பின்னர், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கலைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக வரனும்
இதனிடையே எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலனை செய்த ரமேஷ்குமார், எம்எல்ஏக்கள் என்னிடம் நேரடியாக கடிதங்களை கொடுக்காமல் அதன்மீது முடிவெடுப்பது என்பது சரியான நடைமுறையாக இருக்காது என்று சட்ட வல்லுநர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.