2 முறை சந்தித்தும் ஏற்காத சபாநாயகர்.. மதியம் முதல் சட்டசபை வராத குமாரசாமி! போலீஸ் குவிப்பு, பரபரப்பு
பெங்களூர்: இன்று மாலைக்குள்ளாகவே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்த நிலையில், இதற்கு முதல்வர் குமாரசாமி உடன்படவில்லை.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்தடுத்து 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், தானாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் குமாரசாமி.
கடந்த வியாழக்கிழமை அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்த போதிலும், அந்த தினமும், வெள்ளிக்கிழமையும் அதன் மீது வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
நேர விரையம்
பல்வேறு அலுவல்களை பேசி, ஆளும் கட்சி காலம் தாழ்த்தி விட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. வியாழக்கிழமை இரவு முழுக்க சட்டசபையிலேயே தங்கி, தூங்கி எழுந்து தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை தினம் என்பதால் திங்கள்கிழமை இன்று மீண்டும் சட்டசபை கூடியது.
சபாநாயகர் பேட்டி
முன்னதாக தனது வீட்டுக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் ரமேஷ் குமார் கூறுகையில், எக்காரணத்தைக் கொண்டும் இன்று மாலை 6 மணிக்கு ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி விட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். ஆனால் நான் சர்வாதிகாரி கிடையாது.
உச்சநீதிமன்றம்
சட்டசபையில் எந்த மாதிரி அலுவல்கள் செல்கிறதோ அதை பொறுத்துதான் இந்த முடிவை செயல்படுத்த முடியுமா இல்லையா என்பது தெரியும் என்று, தெரிவித்தார். ஆனால் விப் உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைக் காரணமாக வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட ஆளும் கூட்டணி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இரு நாட்கள் அவகாசம்
இதனிடையே, முதல்வர் மற்றும் ஆளும் கட்சி சீனியர் எம்எல்ஏக்கள் இன்று காலை சபாநாயகரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, இன்னும் இரு தினங்களுக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று, கோரிக்கைவிடுத்தனர். ஆனால் சபாநாயகர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் போதிய பலம் இல்லை என்பதை உணர்ந்துள்ள குமாரசாமி, இன்று பிற்பகலில் மீண்டும் சபாநாயகர் அறைக்குச் சென்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கால அவகாசம் கேட்டார். ஆனால் அதற்கும் சபாநாயகர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. அதிருப்தியிலுள்ள முதல்வர் மதியம் முதல் சட்டசபைக்கே வரவில்லை. நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் அவையில் இருக்க வேண்டியது அவசியமாகும். இதனிடையே மாலை முதல் பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலோக் குமார் தலைமையில் தலைமைச் செயலக வளாகத்தில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.