நலமாக இருக்கிறேன்.. மக்கள் அச்சப்பட வேண்டாம்.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை
பெங்களூர்: கொரோனா அச்சம் காரணமாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா வீட்டு தனிமையில் உள்ளார். அங்கிருந்தபடியே பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.
தான், ஆரோக்கியமாக இருப்பதாகவும், மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
"எனது அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்களுக்கு கொரோனா உள்ளதால், எனது அரசு இல்லத்திலிருந்து (காவிரி இல்லம்) சில நாட்கள் பணியாற்ற முடிவு செய்துள்ளேன் '' என்று முதல்வர் கூறினார்.
கொரோனா சிகிச்சை மையமாகிறது சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம்.. பெருமைப்பட்ட பெங்களூர் நிலைமை இதுதான்
வீட்டிலிருந்து பணி
வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அரசு கடமைகளை நிறைவேற்றுவதாகவும், அதிகாரிகள் சுமூகமாக செயல்படுவதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவையான வழிமுறைகளை வழங்குவதாகவும் எடியூரப்பா கூறினார்.
மக்கள் உஷார்
மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும், அப்போதுதான் நோய் பரவலை குறைக்க முடியும் என்றும் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், பிபிஎம்பி அதிகாரிகள் உடனடியாக முதல்வரின் இல்லமான காவேரியை சுத்திகரித்தனர். கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன.
எடியூரப்பா நலமோடு உள்ளார்
முதல்வரின் அரசியல் செயலாளர் எம்.பி. ரேணுகாச்சார்யா, அளித்த பேட்டியில், "முதல்வர் ஆரோக்கியமாக இருக்கிறார், எந்த பிரச்சனையும் இல்லை. அவர் சில நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க முடிவு செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.
பெங்களூரில் அதிக பாதிப்பு
வியாழக்கிழமையான நேற்று பெங்களூரில் 1,373 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன, இது நகரத்தின் மிகப்பெரிய ஒரு நாளைய பதிவாகும். நகரின் மொத்த கொரோனா நோயாளி எண்ணிக்கை 13,882. எனவே, பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மையமாக மாற்றப்படும் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.