பெங்களூரு மர்ம சப்தத்துக்கு கிடைத்தது விடை! போர் விமானம் சூப்பர் சோனிக் வேகத்தில் சென்றதுதான் காரணம்
பெங்களூரு: பெங்களூருவையே அதிர வைத்த மர்ம் சப்தத்துக்கு ஒருவழியாக விடை கிடைத்துவிட்டது. பெங்களூருவில் வழக்கமாக போர் விமானங்கள் சூப்பர் சோனிக் வேகத்தில் சென்றதாலேயே பயங்கர சப்தம் கேட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று பிற்பகல் பயங்கர இடி போன்ற சப்தம் கேட்டது. இந்த மர்ம சப்தம் குறித்து பல்வேறு செய்திகள் வலம் வரத் தொடங்கிவிட்டன.
பெங்களூருவை நோக்கி வேற்றுகிரக வாசிகளான ஏலியன்கள் படையெடுப்பதாக கதை பரவியது. வங்க கடலில் ஆக்ரோஷமாக நகர்ந்து கொண்டிருந்த ஆம்பன் புயலின் திருவிளையாடலால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட பெருவெடிப்புதான் இந்த ஓசை என்று கூறினார்கள்.
அதேநேரத்தில் மிராஜ் போன்ற போர் விமானங்கள் சூப்பர் சோனிக் வேகத்தில் செல்வதால் எழும் சோனிக் பூம்தான் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் எந்த ஒருதரப்பும் உரிய விளக்கம் தராததால் பெர்ங்களூரு மர்ம சப்தத்துக்கான காரணம் தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது. அதில், வழக்கமாக போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுவதை போல இன்றும் பெங்களூரூ விமான நிலையத்தில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டன. புறநகர் பகுதியில் சூப்பர் சோனிக் வேகத்தில் பயிற்சியில் ஈடுபட்டன.
மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட ஆம்பன்- கொல்கத்தாவில் 100 கி.மீ வேகத்தில் புயல் காற்று- 12 பேர் பலி
இதனால் எழுந்த சோனிக் பூம்தான் பயங்கர சப்தமாக கேட்டிருக்கிறது என விளக்கம் அளித்துள்ளது. ஒலியின் வேகத்தை விட ஒரு பொருள் காற்றில் வேகமாக பயணித்தால் எழக்கூடிய ஒலிதான் சோனிக் பூம். இந்த சோனிக் பூம் பயங்கர ஒலி ஆற்றலை உருவாக்கும். அத்துடன் இடி போன்ற ஓசையை ஏற்படுத்தும். இதுதான் பெங்களூருவில் கேட்ட சப்தத்துக்கும் காரணம்.
இந்த விளக்கத்துக்குப் பின்னராவது பெங்களூரு நகரம் அமைதியாக உறங்கட்டும்!