கர்நாடக அரசியலில் சலசலப்பு.. கையில வளையல் மாட்டிகோங்க.. சித்தராமையாவை வம்புக்கிழுத்த ஷோபா
ஹூப்ளி: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்தவோ, தக்க வைக்கவோ முடியவில்லை என்றால் சித்தராமையா வளையல் அணிந்து கொள்ளட்டும் என, பாஜக தலைவர் ஷோபா கரன்லாஜே கூறியுள்ள கருத்தால் அம்மாநில அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிஞ்சோலி மற்றும் குந்தகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேர் தங்கள் பக்கம் அணி மாற போவதாக எடியூரப்பா கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள தலைவர்கள், எடியூரப்பா பகல் கனவு காண்பதாக கூறியிருந்தனர். இரு தரப்பும் ஆட்சி பற்றி பேசி அடிக்கடி வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அப்பாடா.. அடுத்த 24 மணிநேரத்திற்கு அனல்காற்று வீச வாய்ப்பில்லையாம்.. வானிலை மையம் தகவல்!
இந்நிலையில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவை, பாஜக தலைவர் ஷோபா கரன்லாஜே கடுமையாக விமர்சித்துள்ளார். ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சித்தராமையா மீண்டும் கர்நாடக முதல்வராக வரவேண்டும் என்று கனவு காண்கிறார்.
அதனால்தான் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை ஏவிவிட்டு தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்த வைக்கிறார். குமாரசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த சித்தராமையா, தற்போது, கூட்டணி தர்மத்தை மறந்து தாம் முதல்வராக வேண்டும் என துடிக்கிறார்.
தேவையின்றி மோடி மற்றும் எடியூரப்பாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். 23-ம் தேதிக்குப் பிறகு காங்கிரசில் உள்ள பல சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் பாஜகவிற்கு வருவார்கள். முடிந்தால், தைரியமிருந்தால் சித்தராமையா அவர்களை அவரது கட்சியிலேயே வைத்து பாகாத்து காட்டட்டும். அப்படி முடியவில்லை என்றால் அவர் தனது கைகளில் வளையல்களை போட்டு கொள்ளட்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா சோபா கரன்லாஜே அநாகரிகமாக பேசி மலிவான கருத்துகள் மூலம் பெண்களை அவமானப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்