கர்நாடகாவில் காங்.-ஜேடிஎஸ் ஆட்சி கவிழுமா... எல்லாம் தானாக நடக்கும்.. உற்சாகத்தில் எடியூரப்பா
பெங்களூரு: காங்கிரஸ் ஜேடிஎஸ் கட்சிகள் சட்டசபை கலைத்து மீண்டும் தேர்தலை சந்திக்க விரும்பினால் அதை தான் வரவேற்பதாகவும், மீண்டும் தேர்தலை சந்திக்க பாஜக தயார் என்றும் கர்நாடகா பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்களின் அதிருப்தி காரணமாக தலைக்கு மேல் கத்தி என்ற நிலையில் குமாரசாமியின் ஆட்சி தொடர்ந்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் பாஜக அதிரடியை காட்டக்கூடும் என கூறப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமி முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். முன்னதாக கர்நாடக தேர்தல் முடிந்த உடன் மெஜாரிட்டி இல்லாத சூழலில்அவசர அவசரமாக ஆட்சி பெறுப்பு ஏற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டதால் ஒரே நாளில் ராஜினாமா செய்தார்.
விட்டுக்கொடுத்த காங்
அதேநேரம் மிக அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக, குறைந்த இடங்களில் வென்ற மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது. இதுதான் கர்நாடக அரசியலில் மிகவும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அமைச்சர் கனவு
இந்நிலையில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் கூச்சல் குழப்பம் நிலவுகிறது. குமாரசாமியை முதல்வராக தொடர்வதை காங்கிரஸ் கட்சியில் சிலர் விரும்பவில்லை. இதேபோல் சிலர் அமைச்சரவையில் இடம் பெறாததால் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் பாஜகவுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்கக்கூடும் என்கிற நிலை நிலவுகிறது.
காங்கிரஸ் தலைவர் கருத்து
திங்கள் கிழமை கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கேஎன் ரஜானா பேசுகையில், ஜுன் 10ம் தேதிக்கு மேல் இந்த ஆட்சி தொடராது என்றார். தனக்கு கிடைத்த தகவலின் படி பிரதமர் மோடி பதவி ஏற்கும் வரை கர்நாடகா பாஜகவினர் தங்கள் செயல்களை நிறுத்தி வைத்துள்ளனர் என்றார். இதை உறுதிபடுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் எஸ்எம் கிருஷ்ணாவை அவரது இல்லத்தில் பேசி இருந்தனர். ஆனால் இதில் அரசியல் இல்லை என காங்கிரஸ் கட்சி பூசி மொழுகியது.
ஆட்சியை கலைத்தால்
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது குறித்து அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறுகையில், "கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை நாங்கள் வென்றுள்ளோம். காங்கிரஸ் ஜேடிஎஸ் கட்சிகள் சட்டசபை கலைத்து தேர்தலை சந்தித்ததால் அதை நான் வரவேற்கிறேன். மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியுடன் பாஜக எம்எல்ஏக்கள் எந்த தொடர்பிலும் இல்லை. அரசாங்கம் அமைப்பது குறித்து நான் ஊகிக்க விரும்பில்லை. அந்த விஷயங்கள் எல்லாம் தானாக நடக்கும்" என்றார்.