21 மாத சிறை தண்டனைக்குப் பிறகு 15 நாள் பரோலில் வெளிவந்த இளவரசி!
Recommended Video
பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் அண்ணி இளவரசி 15 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார். கர்நாடக சிறைத்துறை பரோல் வழங்கியதையடுத்து அவர் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முதல் குற்றவாளியாக மறைந்த ஜெயலலிதாவும், அடுத்தடுத்த குற்றவாளிகளாக சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டனர். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவர் மட்டும் விடுவிக்கப்பட எஞ்சிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2017 பிப்ரவரி 14ல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 3 பேரும் அடைக்கப்பட்டனர். பெண்கள் சிறையில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். சுதாகரன் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 5 நாட்கள் அவர் இறந்த போது 13 நாட்கள் என மொத்தம் 18 நாட்கள் சசிகலா பரோலில் வெளியே வந்துள்ளார். இளவரசியும், சுதாகரனும் சிறை சென்ற 21 மாதத்தில் ஒரு முறை கூட பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டனை கைதி இளவரசியிடம், சகோதரர் உடல்நிலை சரியில்லாமல் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை பார்ப்பதற்கு வரும்படியும் உறவினர் ஒருவர் சிறையில் இளவரசியை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளார். அதை ஏற்ற இளவரசி தனது வக்கீல் மூலம் பரோல் மனுவை சிறைத்துறை எஸ்.பி சோமசேகரிடம் அளித்தார். தமிழக அரசு தடையில்லா (என்.ஓ.சி) சான்று வழங்கிய பின் இளவரசிக்கு பரோல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இளவரசிக்கு, கர்நாடக சிறைத்துறை 15 நாள் பரோல் வழங்கியுள்ளது. பரோல் வழங்கப்பட்டதை அடுத்து இன்று இளவரசி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார்.