கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு.. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. நீடிக்குமா குமாரசாமி அரசு.?
Recommended Video
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதால், அம்மாநில அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியில், அதிகார போட்டி மற்றும் அமைச்சர் பதவிகள் தரப்படாததை சுட்டிக்காட்டி பல முறை கலக குரல் வெடித்தது.
எடியூரப்பா தலைமையிலான மாநில பாஜக-வும் ஆபரேஷன் தாமரையை வெற்றிகரமாக்க பல முறை முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் மக்களவை தேர்தல் காரணமாக சிறிது காலம் அமைதியாக இருந்தது பாஜக. மீண்டும் மோடி தலைமையில் அசூர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்ததை அடுத்து, கர்நாடகாவில் தேர்தல் நடைபெறாமல் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
பாஜக-வின் தந்திரத்தின் காரணமாக ஆளும் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 15-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்துள்ளதால், அம்மாநில அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவிட கோரி அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்ற படியேறினர் 15 எம்எல்ஏ-க்கள. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்பதில் சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அதே சமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அவர்களை கட்டாயப்படுத்த கூடாது என உத்தரவிட்டது.
இந்நிலையில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக சட்டப்பேரவையில், குமாரசாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என ஆளும் தரப்பு உறுதிபட கூறியுள்ளது. இது பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.வேணுகோபால் இன்று நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவை அரசியல் கட்சிகளால் பிறப்பிக்க முடியும்.
கொறடா உத்தரவை மீறினால் உறுப்பினர்களை தகுதி நீக்கமும் செய்ய முடியும் என குறிப்பிட்டார். ஆனால் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தாலோ அல்லது அரசுக்கு எதிராக வாக்களித்தாலோ அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் சூழல் நிலவுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்றே்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா, அல்லது பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் குமாரசாமி பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.