குடகில் சாப்பிட்ட பீட்சா.. அட்டையை குப்பையில் போட 80 கிமீ பயணித்த இளைஞர்கள்.. இது வேடிக்கையல்ல பாடம்
பெங்களூரு: சாலையில் குப்பையை போட்ட இளைஞர்கள், அந்த குப்பை எடுக்க மீண்டும் பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்ட வேடிக்கையான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
சுற்றுலா தளங்களின் அழகை கெடுக்கும் வகையில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டிக்கிடப்பதை நாம் பார்த்திருப்போம். இதற்கு காரணமாக இருப்பது சுற்றுலா பயணிகள் தான். குப்பைகளை சாலையில் போடுவதை பெரிய தவறாகவே அவர்கள் கருதுவதில்லை.
அப்படிப்பட்டவர்களுக்கு பாடமாக, சாலையில் குப்பையைப் போடுவதற்கு முன்பு பலமுறை சிந்திக்க வைக்கும் வகையிலான ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
பீட்சா
கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று குடகு மலை. கடந்த வெள்ளிக்கிழமை குடகு மலைக்கு சென்ற இரண்டு இளைஞர்கள், அங்குள்ள ஒரு கடையில் பீட்சா வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் பெட்டியை சாலையில் போட்டுவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டனர்.
ரசீதில் செல்போன் எண்
பீட்சா பெட்டி சாலையில் கிடப்பதை கவனித்த குடகுமலை சுற்றுலாப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய குடகு சுற்றுலா கழகத்தின் பொதுச் செயலாளர் மாதேத்ரா திம்மையா, அதை எடுத்து திறந்துபார்த்தார். அதில் இருந்த ரசீதில் பீட்சா வாங்கியர்வர்களின் செல்போன் எண் இருந்தது.
மறுப்பு
இதையடுத்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட அவர், இளைஞர்களை குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடச் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த இளைஞர்களோ மன்னிப்பு கேட்டார்களே தவிர மீண்டும் குடகு வந்து குப்பை எடுத்து போட சம்மதிக்கவில்லை.
போலீசில் புகார்
இதுகுறித்து போலீசாரிடம் மாதேத்ரா புகார் அளித்தார். போலீசாரும் அந்த இளைஞர்களை தொடர்பு கொண்டு பேசினர். அப்போதும் அவர்கள் மீண்டும் வந்து குப்பையை எடுக்க முடியாது என மறுத்துவிட்டனர்.
மீண்டும் வலியுறுத்தல்
இதையடுத்து அந்த இளைஞர்களின் செல்போன் எண்களை சமூகவலைதளப்பக்கத்தில் மாதேத்ரா பகிர்ந்து, நடந்த சம்பவம் குறித்து பதிவிட்டார். அதைப்பார்த்த உள்ளூர் மக்களும், நெட்டிசன்களும் அந்த இளைஞர்களை தொடர்பு கொண்டு சாலையில் போட்ட குப்பையை மீண்டும் எடுக்கும்படி வலியுறுத்தினர்.
வேறு வழியேயில்லை
தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளாக வந்ததாலும், விசயம் போலீஸ் வரை சென்று விட்டதாலும், வேறு வழியின்றி சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் மீண்டும் பயணித்து சென்று சாலையில் வீசிய பீட்சா பெட்டியை எடுத்து குப்பை தொட்டியில் போட்டனர் அந்த இளைஞர்கள். சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, தற்போது இந்த சம்பவம் கர்நாடகாவைத் தாண்டியும் பேசு பொருளாக மாறியுள்ளது.