பெங்களூருவில் அதிகரித்த வெளிநாட்டு மர வகைகள்.. மண்ணை மலட்டுதன்மையாக்குவதாக குற்றச்சாட்டு
பெங்களூரு: பெங்களூருவில் மண்வளத்தை கெடுக்கும் மற்றும் சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் வெளிநாட்டு மரவகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அழகாக இருப்பதால் வெளிநாட்டு மரவகைகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இதில் உள்ள ஆபத்தை உணரவில்லை. வெளிநாட்டு வகை மரங்களால் நமது சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மண்ணின் வளமும் முழுமையாக கெடுகிறது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் மழை மரங்கள், குல்மோகர் மரங்கள் உள்ளிட்ட மரங்கள் பெங்களூருவில் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் இவை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை பூர்வீகமாக கொண்டவை என தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பு மர இனங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகிறது. இந்த மரங்களால் மண்ணின் வளம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டமும் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். மேலும் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இத்தகைய ஆக்கிரமிப்பு மர இனங்கள் நமது பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் உற்பத்தி திறனையும் குறைக்கிறது.
இந்த மரங்கள் 1950-ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இவை மிகவும் ஆபத்தானது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இத்தகைய மரங்கள் மண்ணை மலட்டுதன்மையடைய செய்கின்றன.
இதனால் விவசாயம் செய்ய இயலாத சூழல் ஏற்படும். எனவே இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் வெளிநாட்டு மரங்களை அகற்றி, நம் நாட்டை பூர்வீகமாக கொண்ட மரங்களை நடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அப்படி செய்தால் தான் நாம் ஆக்ஸிஜனை அதிகமாக பெற முடியும். மேலும் பூச்சிகள் மற்றும் பறவை இனங்கள் பாதுகாக்கப்படும் சுற்றுச்சூழலும் மாசடையாது.
வேப்பமரம், மா மரம், தென்னை மரம், வாழை மரம் உள்ளிட்ட பூர்வீக மரங்களை நாம் வளர்க்க வேண்டும். இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மருத்துவ தன்மையையும் கொண்டிருப்பதால் அதிகளவு நடவு செய்து பயன்பெற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.