காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு
Recommended Video
பெங்களூரு: கனமழை எதிரொலியாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து காவிரியில் இருந்து, தண்ணீர் திறப்பதை கர்நாடகம் அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி உற்பத்தியாகும் குடகு மலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 120 அடியை அதிகபட்ச நீர் தேக்கும் அளவாக கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில், 88.35 அடியாக நீர்மட்டம் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 9066 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 7025 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதே போன்று 84 அடியை உச்சபட்ச நீர் தேக்கும் அளவாக கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 73.23 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 6,335 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 7000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வினாடிக்கு 14,025 கன அடி வீதம் தண்ணீர் பாய்கிறது. இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மேட்டூர் அணைக்கு கடந்த 23ம் தேதி விநாடிக்கு 7,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினமும், நேற்றும் அதே அளவில் நீர்வரத்து நீடித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்திறப்பை காட்டிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.