கொரோனாவை இந்தியா வெற்றி கொண்டது இப்படி தான்... ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
பெங்களூரு: இந்தியாவில் கொரோனா பரவலின் மோசமான காலம் கடந்துவிட்டதாக தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், ஏற்கனவே நாட்டில் 30 கோடி பேருக்கு கொரோனா ஆன்டிபாடிகள் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகைகளும் வைரஸ் பரவலை அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதலே கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தே வருகிறது.
மனித தடுப்புக்கள்
இந்தியாவில் கொரோனா பரவலின் மோசமான காலம் கடந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, நாட்டில் 30 கோடி பேருக்கு கொரோனா ஆன்டிபாடிகள் இருக்கலாம் என்றும் அவர்களே மனித தடுப்புக்களாக இருந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதாகவும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணராக உள்ள பிரமர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தற்போது தினசரி 10 ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. முன்னதாக, 2020ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு அமெரிக்காவை தாண்டும் என்று கணிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்தே வருகிறது. வரும் மார்ச் மாத்திற்குப் பின், வைரஸ் பரவல் மேலும் குறையும் என்று பிரமர் முகர்ஜி கூறினார்.
இரண்டாம் அலை
இது குறித்து தொற்றுநோயியல் நிபுணர் ரமணன் லக்ஷ்மிநாராயண் கூறுகையில், "கொரோனா பரவலின் மோசமான நிலையை இந்தியா ஏற்கனவே எதிர்கொண்டு விட்டது. இப்போது நாட்டில் வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வரும் என்று நான் கருதவில்லை. அப்படி இரண்டாம் அலை ஏற்பட்டாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது" என்றார்.
30 கோடி பேருக்கு ஆன்டிபாடி
மத்திய அரசு சமீபத்தில் நடத்திய செரோலொஜிக்கல் சர்வேயில் நாட்டிலுள்ள 21.5% மக்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதேபோல தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் சுமார் 30கோடி பேருக்கு கொரோனா தடுப்பாற்றல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு குறையும் என்றாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
அதேபோல கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளையும் மத்திய அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 50 வயதைக் கடந்தவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.