மக்களே டோன்ட் வொரி.... 160 கோடி கொரோனா டோஸுக்கு இந்தியா ஆர்டர்!
பெங்களூரு: உலகத்திலேயே இந்தியாதான் 160 கோடி கொரோனா தடுப்பு மருந்து டோஸைப் பெறுவதற்காக ஒப்பந்தம் செய்து முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுளது.
இந்தியாவில் பல்வேறு கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டாவது, மூன்றாவது கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் கொரோனா தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்தியா தீவிரமாக பணியாற்றி வருகிறது.
ஏற்கனேவே ரஷ்யா, இங்கிலாந்து நாடுகள் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிக்க ஆரம்பித்துவிட்டதாக கூறி உள்ள நிலையில், மற்ற உலக நாடுகளும் தடுப்பு மருந்து தயாரிப்பு தயாரிப்பில் தீவிரமாக களமிறங்கி உள்ளன.
ஒழிக்க முடியவில்லை
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தாக்கம் இன்றும் அதிகமாக இருந்து வருகிறது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என கொரோனா தடுப்பு மருந்துகளை பின்பற்றினாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமே தவிர, அதனை நிரந்தரமாக ஒழிக்க முடியாது.
உலக நாடுகள் போட்டி
இந்த தொற்றை அடியோடு தீர்த்து கட்ட தடுப்பு மருந்து அவசியம். தடுப்பு மருந்து தயாரிப்பில் உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்தியாவிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் உலகத்திலேயே அதிக அளவில் இந்தியா 160 கோடி கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை பெற ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியா முதல் இடம்
உலக நாடுகளுக்கும், கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையிலான மேம்பட்ட உறுதிப்பாட்டைக் கண்காணித்து வரும் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:-உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வாக்சின் நடைமுறைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. சுமார் 1.6 பில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா செய்து முடித்துள்ளது. இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
ஜூலைக்குள் 5௦௦ மில்லியன் டோஸ்கள்
ஐரோப்பிய ஒன்றியம் 1.58 பில்லியன் டோஸைப் பெறும் ஒப்பந்தங்களுடன் இரண்டாவது இடத்தையும், அமெரிக்கா ஒரு பில்லியனுக்கும் அதிகமான டோஸைப் பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொண்டு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 2021 ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள் 500 மில்லியன் டோஸ் வரை பெற தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
மூன்று உலகளாவிய தடுப்பூசி நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் வாக்சினை விநியோகிக்க தயாராக உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் ஆறு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை நடத்தியுள்ளன. இந்தியா ஆஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியில் 500 மில்லியன் டோஸையும், அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் இன்க் நிறுவனத்திடமிருந்து ஒரு பில்லியன் டோஸையும், ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியில் 100 மில்லியன் டோஸையும் பெறும்.
தீவிரம்
புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தியாவில் தடுப்பூசியை பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டியின் ஆய்வக நிறுவனம் ரஷியாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி பரிசோதனைகளை இந்தியாவில் நடத்தி வருகிறது.
மூன்றாவது கட்ட சோதனை
ஏறக்குறைய 200 தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் மருந்து தயாரிப்பு சோதனை முறைகளில் முன்னேறி வருகின்றன. 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இரண்டாவது, மூன்றாவது கட்ட பரிசோதனையில் உள்ளது என டியூக் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுளது.