விசா முடிந்து அமெரிக்காவில் தவித்த ஊழியர்கள்.. சிறப்பு விமானத்தில் தாயகம் அழைத்து வந்த இன்போசிஸ்!!
பெங்களூர்: விசா காலக்கெடு முடிந்து அமெரிக்காவில் சிக்கி இருந்த தனது இந்திய ஊழியர்களை இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் தாயகம் அழைத்து வந்துள்ளது. அமெரிக்காவில் தங்களது குடும்பத்தினருடன் சிக்கி இருந்த 200 பேர் நேற்று பெங்களூர் விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.
இவர்கள் அனைவரும் சிறப்பு சார்டர்ட் விமானத்தின் மூலம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருக்கு திங்கள் கிழமை காலை அழைத்து வரப்பட்டனர். அனைத்து செலவுகளையும் இன்போசிஸ் நிறுவனமே ஏற்றுக் கொண்டது.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரி சஞ்சீவ் போடே தனது லிங்க்கின் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ''கோவிட் 19 நமது வாழ்க்கையை கற்பனை செய்து கொள்ள முடியாத அளவிற்கு பெரிய அளவில் பாதித்துள்ளது. எங்களது நிறுவனத்தை சேர்ந்த சில ஊழியர்கள் விசா காலக்கெடு முடிந்த நிலையில் அமெரிக்காவில் சிக்கிக் கொண்டனர். சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆதலால், அவர்களை சிறப்பு விமானத்தின் மூலம் பெங்களூர் அழைத்து வந்தோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
முதன் முறையாக இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் சிக்கி இருந்த தனது ஊழியர்களை அழைத்து வருவதற்கு சார்ட்டர்ட் விமானத்தை புக் செய்து இருந்தது. அவர்களை இந்தியா அழைத்து வந்ததன் மூலம் ஊழியர்களுக்கும், நிறுவனத்துக்கும் பெரிய அளவில் நிம்மதி ஏற்பட்டுள்ளது என்றும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியா சர்வதேச விமானங்களை ரத்து செய்தது. அன்று முதல் அமெரிக்காவில் இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் அமெரிக்காவில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் தற்போது இன்போசிஸ் ஊழியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
கொரோனா- டெல்லி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து பத்திரிக்கையாளர் தற்கொலையில் சர்ச்சை
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் இந்த நிறுவனங்களின் வேலைகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அமெரிக்காவில் இருக்கும் அந்த நாட்டு நிறுவனங்களிலும் பெரிய அளவில் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
அமெரிக்காவில் பணியாற்றி வந்த பெரும்பாலான இந்திய ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது தாயகம் திரும்பியுள்ளனர்.